இந்திரா உடலில் பாய்ந்த குண்டுகள் எத்தனை - அறிய விரும்பிய சத்வந்த் சிங்
டெல்லி: முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை சுட்டுக் கொன்றவர்களில் ஒருவரான சத்வந்த் சிங், இந்திராவின் உடலில் எத்தனை குண்டுகள் பாய்ந்தன என்பதை அறிய விரும்பியதாக இந்தக் கொலை வழக்கில் முக்கிய சாட்சிகளில் ஒருவரான டாக்டர் டி.டி. டோஹ்ரா கூறியுள்ளார்.
கடந்த 1984ம் ஆண்டு மெய்க்காவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார் இந்திரா காந்தி. அவர்களில் ஒருவர் சத்வந்த் சிங். இந்திராவை பாதுகாப்பாளர்கள் சுட்டு வீழ்த்தியதும் அவர் ரத்த வெள்ளத்தில் மிதந்தார். உடனடியாக அவரை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர் உயிரிழந்தார்.
இந்திராவின் உடலில் பிரேதப் பரிசோதனை செய்த டாக்டர்களில் ஒருவர் டி.டி.டோஹ்ரா. இந்திரா கொலை வழக்கில் டோஹ்ராவும் ஒரு சாட்சியாவார். அந்த சமயத்தில், டோஹ்ரா பேராசிரியராக பணியாற்றி வந்தார். தற்போது டோஹ்ரா, தடயவியல் துறை தலைவராக இருக்கிறார்.
இந்த நிலையில், கோர்ட் விசாரணையின்போது நடந்த ஒரு சம்பவத்தைக் கூறியுள்ளார் சத்வந்த் சிங். இதுகுறித்து அவர் கூறுகையில்,
முன்னாள் பிரதமர் இந்திரா கொல்லப்பட்ட சில காலம் கழித்து, அது தொடர்பான வழக்கு கோர்ட்டில் நடந்தது. சாட்சியம் அளிப்பதற்காக நான் கோர்ட்டுக்கு சென்றேன். அப்போது முன்னாள் பிரதமரை சுட்டுக் கொன்ற குற்றவாளிகளில் ஒருவனான சத்வந்த் சிங் முன், என்னிடம் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்தேன்.
விசாரணை இடைவேளையின்போது, கழிவறைக்கு சென்றேன். அப்போது, சத்வந்த் சிங்கும் அங்கு வந்தான்.அப்போது அவன், டாக்டர், என்னால் தான், நீங்கள் இங்கு சாட்சியம் அளிப்பதற்காக வந்துள்ளீர்கள். இதற்காக உங்களுக்கு ஏற்பட்ட இடையூறுக்கு வருந்துகிறேன்.
பிரதமர் இந்திரா உடலில் எத்தனை குண்டுகள் பாய்ந்திருந்தன என, அறிந்து கொள்ள விரும்புகிறேன்; கூற முடியுமா என்றான். இதற்கு நான் எந்த பதிலும் கூறவில்லை.
கொலை நடந்த அன்று, பிரதமர் இந்திரா உடல் மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுவதாக போலீசார் மூலம் தகவல் கிடைத்தது. மதியம் 2.30க்கு டாக்டர்கள் சரண், தீக்ஷித் ஆகியோருடன் இணைந்து, பிரேத பரிசோதனை செய்தேன். பிரதமரின் பிரேத பரிசோதனை அறிக்கையை தயார் செய்தோம்.
அதில், குண்டு காயங்களால் உடலில் இருந்து பெருமளவில் ரத்தம் வெளியேறியதே மரணத்துக்கு காரணம் என, குறிப்பிட்டோம். பிரதமரை நோக்கி 31 குண்டுகள் சுடப்பட்டிருந்தன. இதில் 30 குண்டுகள் அவரது உடலில் காயம் ஏற்படுத்தியிருந்தன. 23 குண்டுகள், உடலை துளைத்து மறுபுறம் சென்று விட்டன. ஏழு குண்டுகள் உடலில் இருந்தன. துப்பாக்கி குண்டுகள் பாய்ந்ததால், அவரது இடுப்பு எலும்பு நொறுங்கி விட்டது. கல்லீரலின் ஒரு பகுதியை காணவில்லை. பிரேத பரிசோதனை ஆபரேஷன் தியேட்டரில் தான் நடந்தது என்றார் டோஹ்ரா.












Click it and Unblock the Notifications