முல்லைப் பெரியாறு அணை: ஐவர் குழுவை எதிர்த்து தாக்கலான தமிழகத்தின் மனு டிஸ்மிஸ்

முல்லைப் பெரியாறு அணை குறித்த வழக்கை விசாரித்த அரசியல் சாசன பெஞ்ச், ஐந்து பேர் கொண்ட குழுவை அமைக்க உத்தரவிட்டது. இந்தக் குழுவுக்கு முன்னாள் நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைவராக இருப்பார் என்றும், மத்திய அரசு, தமிழக, கேரள மாநிலங்கள் சார்பில் பிரதிநிதிகள் இடம் பெறுவார்கள் என்றும் அது அறிவித்தது.
இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஏற்கனவே பலமுறை அணையின் பலம், ஸ்திரத்தன்மை குறித்து ஆராயப்பட்டு விட்டது. இந்த நிலையில் மீண்டும் ஆய்வு நடத்துவது தேவையற்றது.
இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட் தனது கடமையை தட்டிக் கழிக்கப் பார்க்கிறது. எனவே இந்த உத்தரவை கைவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
இதை சமீபத்தில் விசாரித்த நீதிபதி ஜெயின், இந்த ஆட்சேபனையை குழு அமைக்க உத்தரவிட்டபோதே, ஏன் தெரிவிக்கவில்லை என்று கேட்டார். பின்னர் மற்ற நீதிபதிகளிடம் கலந்து ஆலோசித்த பின்னரே உத்தரவு பிறப்பிக்க முடியும் என்று கூறி வழக்கை தள்ளி வைத்தார்.
இந்த நிலையில் இன்று அரசியல் சாசன பெஞ்ச் இந்த மனுவை விசாரித்தது. விசாரணைக்குப் பின்னர் தமிழக அரசின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் தலைமையிலான குழுவை ரத்து செய்ய முடியாது. அதன் விசாரணை திட்டமிட்டபடி நடைபெறும் என்று நீதிபதிகள் அறிவித்தனர்.
மேலும், ஆய்வுக் குழுவுக்கான செலவை தமிழக, கேரள மாநில அரசுகளே ஏற்க வேண்டும் என்று கோரி மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications