கழுகுமலை அருகே வயிற்றுப்போக்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி
கழுகுமலை: நெல்லை மாவட்டம் கழுகுமலை அருகே வயிற்றுப் போக்குக்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியானார்கள்.
கழுகுமலை அருகே அழகுநாச்சியார்புரத்தை சேர்ந்த கூலி தொழிலாளி கணபதி. இவரது மனைவி காளியம்மாள். இவர்கள் இருவரும் வேலைக்காக சேரன்மகாதேவி சென்றனர். அங்கு காளியம்மாளுக்கு திடீரென வயிற்றுபோக்கு ஏற்பட்டது. தகவல் அறிந்த காளியம்மாளின் அக்கா கழுகுமலை அருகே கரடிகுளம் சின்ன காலனியை சேர்ந்த இன்னொரு காளியம்மாள் அவரை வந்து பார்த்து விட்டு சென்றார்.
கரடிகுளத்திற்கு வந்தவுடன் அவருக்கும் வாந்திபேதி ஏற்பட்டது. இதில் கடந்த 26ம் தேதி காளியம்மாள் இறந்தார். இதையறிந்த கணபதி குடும்பத்தினர் துக்க வீட்டிற்கு சின்ன காலனி சென்றனர். அங்கு அதே நாளில் கணபதியின் மகன் குருசந்திரனும் வயிற்றுப்போக்கால் இறந்தான். காளியம்மாளின் தாய் முத்தம்மாளுக்கும் வாந்தி பேதி ஏற்பட்டது. உடனடியாக அவரை கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிக்சை பலனின்றி அவர் அங்கு இறந்தார். வயிற்றுப்போக்குக்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இறந்த காளியம்மாளின் மகள் கலையரசி மற்றும் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு காளியம்மாள் என்பவரும் வயிற்று போக்கு ஏற்பட்டு கழுகுமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தகவல் அறிந்த கோவில்பட்டி சுகாதார துறை பணிகள் துணை இயக்குனர் ரால்ப் செல்வின் தலைமையில் மருத்துவ குழுவினர் மேலும் நோய் பரவாமல் தடுக்க தடுப்பு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications