ராணுவ தலைமைத் தளபதியாக வி.கே.சிங் நாளை பதவியேற்பு: புலிகளை ஒடுக்க திட்டம் வகுத்தவர்

தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் நிறைந்த அனுபவம் கொண்டவர் வி.கே.சிங். தற்போது கிழக்குப் பிராந்திய தலைமைத் தளபதியாக இருந்து வருகிறார். நாளை ராணுவத் தலைமைத் தளபதியாக பொறுப்பேற்கவுள்ளார்.
59 வயதாகும் வி.கே.சிங், நாளை ஜெனரல் தீபக் கபூரிடமிருந்து பொறுப்புகளை ஏற்றுக் கொள்கிறார். 2 ஆண்டுகளுக்கு தலைமைத் தளபதி பதவியில் இருப்பார் சிங்.
இந்திய ராணுவத்தின் ராஜ்புத் பிரிவைச் சேர்ந்த அதிகாரி சிங். வெல்லிங்டன் ராணுவக் கல்லூரியில் படித்தவர். அமெரிக்க ராணுவ போர் கல்லூரியிலும் பயின்றுள்ளார். அமெரிக்கானின் போர்ட் பென்னிங்கில் ரேஞ்சர்ஸ் கோர்ஸையும் முடித்துள்ளார்.
ராஜ்புத் படைப் பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தலைமைத் தளபதி பதவிக்கு வருவது இது இரண்டாவது முறையாகும்.
1970ம் ஆண்டு ஜூன் மாதம் ராஜ்புத் படைப் பிரிவில் இணைந்தார் சிங். தீவிரவாத ஒழிப்புப் பணிகளில் நிறைந்த அனுபவம் கொண்டவர். இந்தியா, பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் நீண்ட காலம் பணியாற்றியுள்ளார்.
முக்கியமாக, விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதல் திட்டமான ஆபரேஷன் பவன் என்ற திட்டத்தை வகுத்துக் கொடுத்தார். அதற்காக அவருக்கு யுத் சேனா பதக்கமும் அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
1971ம் ஆண்டு நடந்த வங்கதேசப் போரின்போது இவர் பெரும் பங்காற்றியுள்ளார். கடந்த 2001ம் ஆண்டு இந்திய நாடாளுமன்றம் தாக்கப்பட்டபோது பாகிஸ்தான் மீது படையெடுப்பதற்காக ஆபரேஷன் பராக்கிரம் என்ற பெயரில் எல்லையில் படைகள் குவிக்கப்பட்டன. அதை ஒருங்கிணைத்து நடத்தியவர் சிங்.
அதி விசிஷ்ட் சேவா பதக்கத்தையும் பெற்றுள்ளார்.












Click it and Unblock the Notifications