மக்கள் நடமாட வசதியாக ஹைதராபாத்தில் 2 மணி நேரம் ஊரடங்கு தளர்வு
ஹைதராபாத்: வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள பழைய ஹைதராபாத்தில் சார்மினார் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 8 மணி முதல் 10 மணி வரை 2 மணி நேரத்திற்கு ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது.
மக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு வசதியாக இந்த ஊரடங்கு தளர்வு அமல்படுத்தப்பட்டது.
கடந்த திங்கள்கிழமை மாலை ஊரடங்கு உத்தரவு அங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர் இன்றுதான் முதல் முறையாக ஊரடங்கு தளர்த்தப்பட்டது.
ஹைதராபாத் கலவரத்தில் 2 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 150 பேர் காயமடைந்துள்ளனர். பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே ஹைதராபாத்தில் மூண்ட கலவரம் திட்டமிட்ட சதியாகும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. சாதாரண மோதலை பெரும் வன்முறையாக மாற்றியது, இரு சமூகங்களைச் சேர்ந்த சிலர் அனுப்பிய எஸ்.எம்.எஸ். செய்திகள்தான் என்றும் போலீஸார் கூறியுள்ளனர்.
ஹைதராபாத்தின் அமைதியை சீர்குலைக்க வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும் என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
கலவரம் காரணமாக ஹைதராபாத் முழுவதும் 410 மையங்களில் பத்தாம் வகுப்பு தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.