இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் மோதல் - 20 பேர் மீது வழக்கு
நாகர்கோவில்: தக்கலை அருகே நேற்று முன்தினம் நடந்த இளைஞர் காங்கிரஸ் தேர்தல் மோதல் தொடர்பாக இருதரப்பை சேர்ந்த 20 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் இளைஞர் காங்கிரஸ் தேர்தல் கடந்த மாதம் 7ம் தேதி தொடங்கியது. சட்டமன்றம் வாரியாக வார்டு, நகர, கிராம பஞ்சாயத்து தேர்தல்கள் நடந்தன. பின்னர் 2ம் கட்டமாக சட்டமன்ற, நாடாளுமன்ற நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகள் தேர்வுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 22ம் தேதி தொடங்கியது.
ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் தலைவர், துணை தலைவர், பொது செயலாளர் உள்பட 10 பேரும், 10 பிரதிநிதிகளுக்கும் தேர்தல் நடந்தது. தக்கலை அடுத்த முளகுமூட்டில் இதற்கான தேர்தல் கடந்த கடந்த 31ம் தேதி நடைபெற்றது. இரு கோஷ்டியினரிடையே மோதல் ஏற்பட்டது.
நாகர்கோவில் பெருவிளையை சேர்ந்த பிரசாத், அதே பகுதியை சேர்ந்த ரகுமான், முன்னாள் நகர காங் தலைவர் அய்யபபன் ஆகியோர் தாக்கப்பட்டனர். இது தொடர்பாக ரகுமான் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் ஜெயபால் எம்எல்ஏவின் தம்பி ஜெயசந்திரன், மருமகன் நவீன், மகன் சிவபிரபு உள்பட 10 பேர் மீது தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதேபோல் பெருவிளையை சேர்ந்த ஜெயசந்திரன் என்பவர் அளித்த புகாரின் பேரி்ல் சிஎல் ஜோ, அய்யப்பன், பிரசாத், சகாய ஆன்றோ, உள்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இரு புகாரின் அடிப்படையிலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications