தமிழக போலீசாருக்கு எதிராக மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்வோம்: ஜி.கே.மணி
சேலம்: தமிழக காவல் துறை அதிகாரிகளுக்கு எதிராக மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்ய உள்ளதாக பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாமக தலைவர் கோ.க.மணி சேலத்தில் நிருபர்களிடம் கூறுகையில்,
'தமிழகத்தில் காவல்துறை உயர் அதிகாரிகள் முதல் அடிமட்ட சாதாரண போலீசார் வரை நல்ல திறமையாக செயல்பட்டு, நாட்டுக்கு பெருமை சேர்க்கிறார்கள். இவர்களை பாராட்டுவதோடு, வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்.
அதே நேரத்தில் சமீபகாலமாக போலீஸ் துறையின் கைகள் கட்டப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டம் மேச்சேரி பிரச்னையில் பொதுமக்கள் மத்தியில் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது.
பீதியின் காரணமாக ஊரை விட்டு வெளியேறி தலைமறைவாக இருக்கும் நிலை பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
பாமக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. பாமக அலுவலகத்தை அடித்து நொறுக்கியவர்கள் மீது இதுவரை எந்தவித வழக்கும் பதிவு செய்யப்படவில்லை.
மாறாக காவல்துறை குற்றவாளிகளுக்கு துணை நிற்கிறது. ஒரு தலைப்பட்சமாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அடிபட்ட பாமகவினருக்கு சிகிச்சை அளிக்காமல் தொடர்ந்து சிறையில் அடைத்து இருப்பது மனித உரிமை மீறல் செயலாகும்.
தமிழக போலீஸ் துறை அதிகாரிகள் கட்டவிழித்து விடப்பட்டு, அடியாட்களாகவும், கூலிப்படையாகவும் செயல்படுகின்றனர். இது மனித உரிமை மீறும் செயலாகும். இது குறித்து மனித உரிமை ஆணையத்திடம் பாமக புகார் செய்யும்
போலீசாரின் அராஜக செயல்களை கண்டித்து இன்று (ஏப்ரல் 2 ம் தேதி) மேச்சேரியில், பாமக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது' என்றார்.












Click it and Unblock the Notifications