காலாவதி, போலி மருந்து மோசடி வழக்கு – சிபிசிஐடிக்கு மாற்றம்

சென்னையில் காலாவதியான மருந்தை சாப்பிட்ட குழந்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து நடந்த விசாரணையில் மீனா ஹெல்த்கேர் நிறுவனத்திலிருந்து விற்கப்பட்ட மருந்து காலாவதியானதாக இருந்ததும், அதை சாப்பிட்டதால்தான் குழந்தை இறந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து மீனா ஹெல்த்கேர் நிறுவன அதிபர் மீனாட்சி சுந்தரம் தலைமறைவானார். இதுகுறித்த நடந்த விசாரணையில் பெரிய அளவில் இந்த காலாவதியான மருந்துகள் விற்பனை நடந்து வருவது தெரிய வந்து பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.
சென்னையில் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இந்த மோசடி பெரும் கட்டமைப்புடன் நடந்து வருவதும் தெரிய வந்த்து. இதையடுத்து போலீஸார் நடத்திய வேட்டையில் மீனாட்சி சுந்தரம், ராஜஸ்தானைச் சேர்ந்த சஞ்சய்குமார் உள்ளிட்டோர் சிக்கினர்.
பல மருந்துக் கடைகள் சீல் வைக்கப்பட்டன. கோடிக்கணக்கான மதிப்பு வாய்ந்த காலாவதியான மருந்துகளும் சிக்கின.
இதேபோல போலி மருந்து விற்பனையும் வெளிச்சத்திற்கு வந்து மக்களுக்க பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தமிழகம் முழுவதும் மோசடி வலை இருப்பதால் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற மாநில டிஜிபிக்கு, சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் பரிந்துரைத்திருந்தார். இதையடுத்து இன்று இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி லத்திகா சரண் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications