சென்சஸ்: அரவாணிகளையும் சேர்க்க பிரதமருக்கு கருணாநிதி கோரிக்கை!

2011ம் ஆண்டுக்கான தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகள் நேற்று முன்தினம் தொடங்கியது. இன்று டெல்லியில் நடந்த கணக்கெடுப்பில் தனது விவரங்களை சென்சஸ் பணியாளர்களிடம் வழங்கினார் பிரதமர் மன்மோகன் சிங்.
மக்களுக்கு பயன் அளிக்கும் வகையில் நாட்டின் வளர்ச்சித் திட்டங்கள் அமைய வேண்டுமானால் அனைத்து மக்களும் இந்த கணக்கெடுப்புக்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில், நாட்டில் உள்ள ஆண், பெண் மட்டுமல்லாது அரவாணிகளையும் கணக்கெடுப்பில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், வீடில்லாத நடைபாதை வாசிகளின் நிலையையும் கணக்கெடுப்பில் கவனம் செலுத்த வேண்டும் என முதல்வர் கருணாநிதி வலியுறுத்தி உள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார். அதில், 'நமது நாட்டில் ஆண் இனத்திலும் சேராமல் பெண் இனத்திலும் சேராமல் அரவாணிகள் என்றழைக்கப்படுபவர்கள் கணிசமான அளவில் உள்ளனர்.
அவர்களையும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் சேர்க்க வேண்டும். அதற்கு ஏற்ப மக்கள் தொகை கணக்கெடுப்பு ஏற்பாடுகளில் தேவையான திருத்தம் செய்யவேண்டும்.
அதுபோல நாம் பல்வேறு நலத்திட்டங்கள், நடவடிக்கைகள் செய்துள்ள போதிலும் நடைபாதைகளில் குடியிருப்பவர்களும் நிறைய பேர் உள்ளனர்.
பொதுவாக மக்கள் தொகை கணக்கெடுப்புகளின் போது அவர்கள் விடுபட்டு போய் விடுகிறார்கள். எனவே நடைபாதைகளில் குடியிருப்பவர்களையும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் சேர்த்துக்கொள்ள வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications