நாமக்கல் மாவட்டத்தில் ஒருநாள் ரெய்டில் எட்டு போலி டாக்டர்கள் கைது
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் ஒரு நாள் அதிரடி சோதனையிலேயே எட்டு போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் ஏராளமான போலி டாக்டர்கள் இருப்பதாக கலெக்டர் சகாயத்திற்கு புகார்கள் வந்தன. உடனடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
அதிகாரிகள் குழுவினர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று திடீர் சோதனை நடத்தினர்.
இதில், முறையாக டாக்டர் பட்டம் பெறாமல் சிகிச்சை அளித்து வந்த முத்துக்காப்பட்டியை சேர்ந்த தங்கமணி (48), திருச்செங்கோட்டை சேர்ந்த தினேஷ் (32), குமரவேல் (62), அறிவழகன் (37), முருகேசன் (43), சண்முகம் (70), நாமக்கல் அலங்காநத்தத்தை சேர்ந்த மணிவாசகம் (40), ப.வேலூர் பெருங்குறிச்சியை சேர்ந்த பெரியசாமி (40) ஆகியோர் கையும் களவுமாக பிடிபட்டனர்.
அவர்களிடம் இருந்த பல ஆயிரம் மதிப்புள்ள மருந்து, மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டன. மேலும் போலி மருத்துவர்களின் மருத்துவமனைகளுக்கும் சீல் வைக்கப்பட்டது.
எட்டு பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
தமிழகம் முழுவதும் ஒன்றரை லட்சம் போலி டாக்டர்கள்
இதற்கிடையே, போலி டாக்டர்களை பிடிக்கும் நடவடிக்கையில், முறையாக படித்து சிகிச்சை அளித்து வரும் சித்த மருத்துவர்களை போலீசார் கைது செய்யக் கூடாது என சித்த மருத்தவ பட்டதாரிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
நெல்லையில் நடந்த தமிழ்நாடு சித்த மருத்துவ பட்டதாரிகள் சங்க மாநில பிரதிநிதிகளின் அவசர ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பின் அச்சங்கத்தின் மாநில செயலாளர் ராஜசேகரன் நிருபர்களிடம் கூறுகையில்,
'தமிழகத்தில் சுமார் ஓன்றரை லட்சம் போலி டாக்டர்கள் இருக்கின்றனர். போலி டாக்டர்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் போலீசாரின் நடவடிக்கையை வரவேற்கிறோம்.
ஆனால், முறையாக சித்த மருத்துவம் படித்து பட்டம் பெற்ற கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த டாக்டர் ரவீந்திரன் மற்றும் ஆழ்வார்குறிச்சியை சேர்ந்த டாக்டர் முருகன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம்.
இந்திய மருத்துவ குழுவினரால் ஆங்கீகரிக்கப்பட்ட சித்த மருத்துவர்கள், ஆயுர்வேத மருத்துவர்கள், யுனானி மருத்துவர்கள் தாங்கள் பெற்ற பயிற்சியின் துணையாக கொண்டு நவீன மருத்துவம், மகளிர் சிகிச்சை, அலோபதி சிகிச்சை, பிரவச சம்பந்தமான மருத்துவ சிகிக்சைகளை மேற்கொள்ளலாம் என இந்திய மருத்துவ குழு தெரிவித்துள்ளது.
முறையாக இந்திய மருத்துவ பட்டப்படிப்பு படித்த டாக்டர்களை கைது செய்ய கூடாது என சென்னை ஐகோர்ட்டும் உத்தரவு பிறப்பித்துள்ளது. இப்படி இருக்கும்போது சித்த மருத்துவம் படித்த டாக்டர்களை போலீசார் கைது செய்வது சரியல்ல.
சித்த மருத்துவம் படித்தவர்களை கைது செய்த போலீசார் மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர உள்ளோம்' என்றார்.












Click it and Unblock the Notifications