கசாப், அன்சாரிக்கு எதிராக ரெட்கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்க இன்டர்போலுக்கு பா. கோரிக்கை

மும்பையில் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக, தீவிரவாதி அஜ்மல் அமீர் கசாப் உட்பட 13 பேர் மீது பாகிஸ்தான் அரசு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
ராவல்பிண்டி அடியாலா சிறையிலுள்ள தீவிரவாத தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இவ்வழக்கு நடைபெற்று வருகிறது. முதலில் இந்த தாக்குதல் சம்பவத்தில் எவ்வித தொடர்பும் இல்லை என மறுத்து வந்த பாகிஸ்தான், சர்வதேச நிர்பந்தத்துக்கு பிறகு வழக்கை தொடர்ந்து, நடத்தி வருகிறது.
இந்நிலையில் இவ்வழக்கில் முக்கிய திருப்பமாக, இந்தியாவில் தற்போது விசாரணையை சந்தித்து வரும் கசாப் மற்றும் பாகிம் அன்சாரியை சர்வதேச போலீசிடம் (இன்டர்போல்) ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை பாகிஸ்தான் முன் வைத்துள்ளது.
ராவல்பிண்டியில் தீவிரவாத தடுப்பு நீதிமன்றத்தில் நேற்று நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர் மாலிக் ராப் நவாஸ் மூன் இதுபற்றி கூறுகையில்,
'லஷ்கர் இ தொய்பா அமைப்பின் தலைவர் ஜாகிர் ரஹ்மான் லக்வி உட்பட பலருக்கு எதிராக, நடந்து வரும் மும்பை தாக்குதல் வழக்கின் விசாரணை வரும் 17ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தியாவில் தற்போது வழக்கு விசாரணையை சந்தித்து வரும் அஜ்மல் மற்றும் பாகிம் அன்சாரியை பிடித்துத் தர வேண்டும் எனக் கோரி இன்டர்போலை அணுகியுள்ளோம். விரைவில் இன்டர்போல் சார்பில் 'ரெட் கார்னர்' நோட்டீஸ் பிறப்பிக்கப்படும்' என்றார்.












Click it and Unblock the Notifications