தேனி மாவட்டத்துக்கு கடத்தப்பட்ட 40 கிலோ கஞ்சா பறிமுதல்
திண்டுக்கல்: சென்னையில் இருந்து ஆம்னி பஸ்சில் திண்டுக்கல் வழியாக 40 கிலோ கஞ்சா கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில், மதுவிலக்கு போலீசார் திண்டுக்கல் - பழனி பைபாஸ் சாலையில் நேற்று அதிகாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது சென்னையில் இருந்து தேனி மாவட்டம் கம்பத்திற்கு ஒரு ஆம்னி பஸ் வந்து கொண்டு இருந்தது. அந்த பஸ்சை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர்.
அந்த பஸ்சில் 6 ஆப்பிள் பெட்டிகளுக்கு இடையே வெளியூருக்கு துணிமணிகள் கொண்டு செல்லும் 5 பெரிய பைகளில் 40 கிலோ கஞ்சா வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர்.
கஞ்சா மணம் தெரியாமல் இருப்பதற்கு 6 காஷ்மீர் ஆப்பிள் பெட்டிகளை அருகில் வைத்து கொண்டு வந்துள்ளது தெரிய வந்தது. ஆப்பிள் மணம் வீசும் போது, கஞ்சா மணம் தெரியாமல் இருக்கும் என்று நூதன முறையில் கடத்தி வந்துள்ளது தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து கஞ்சா கடத்தி வந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் அவர் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா கோம்பையைச் சேர்ந்த பால் கண்ணன் (30) என்பது தெரிய வந்தது.
அவரிடம் இருந்த 40 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். பால்கண்ணன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications