அதிமுக எம்.எல்.ஏக்கள் மீதான சஸ்பெண்ட் தண்டனை ஒரு நாளாக குறைப்பு
நேற்று தமிழக சட்டசபையில் பெரும் அமளி ஏற்பட்டது. திமுக உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சுக்கு ஆட்சேபனை தெரிவித்து அதிமுக எம்.எல்.ஏக்கள் அருண்மொழித் தேவன், ஹரி ஆகியோர் கடும் மோதலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து இருவரையும் வெளியேற்ற சபாநாயகர் ஆவுடையப்பன் உத்தரவிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
பின்னர் மீண்டும் உள்ளே வந்த அவர்கள் சபாநாயகர் இருக்கை முன்பு கூடி பெரும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அனைவரையும் வெளியேற்ற உத்தரவிட்ட சபாநாயகர் பின்னர் அவர்களை 9ம் தேதி வரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில் இன்று காலை சட்டசபை கூடியதும், அதிமுக எம்.எல்.ஏக்கள் மீதான சஸ்பெண்ட் தண்டனையை ஒரு நாளாகக் குறைக்கலாம் என்று முதல்வர் கருணாநிதி பரிந்துரைத்தார்.
இதை ஏற்ற சபாநாயகர் ஆவுடையப்பன், சஸ்பெண்ட் உத்தரவு இன்று வரை அமலில் இருக்கும் என்றும், நாளை முதல் சஸ்பெண்ட் ஆன அதிமுக எம்.எல்.ஏக்கள் சபைக்கு வரலாம் என்றும் அறிவித்தார். இதுதொடர்பாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரான ஜெயலலிதாவைத் தவிர அனைத்து அதிமுக எம்.எல்.ஏக்களும் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயல்லிதா நேற்று சபைக்கு வராததால் அவர் சஸ்பெண்ட் ஆகவில்லை.