விடுதலை சிறுத்தைகளுக்கு டாக்டர்கள் சங்கம் கண்டனம்
மதுரை: வேலூரில், பணி நேரத்தில் சென்னைக்குக் கிளம்பவிருந்த டாக்டர்களை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவத்திற்கு மருத்துவர்கள் சங்க செயலாளர் செந்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுக்க சுமார் 40 ஆயிரம் டாக்டர்கள் உள்ளனர். இதில், அரசு மருத்துவமனைகளில் 12 ஆயிரம் பேர் பணி புரிகின்றனர். சிறப்பு டாக்டர்கள் 60 சதவீதம் பேரும், சூப்பர் சிறப்பு டாக்டர்கள் 70 சதவீதம் பேரும் உள்ளனர்.
தமிழகம் முழுக்க பல பகுதிகளில் பலகோடி ரூபாய் செலவில் பொது மக்கள் நலன் கருதி இலவச மருத்துவ சேவை வழங்கி வருகின்றது.
இதில் பணியாற்றும் டாக்டர்களுக்கு பல்வேறு சலுகைகளுடன் பல ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறது.
ஆனால், அரசு மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்கள் மருத்துவமனையில் இருக்கும் நேரத்தை விட தங்களது சொந்த கிளினிக்கில் பணியாற்றும் நேரம் தான் அதிகமாக உள்ளது.
இதனால், அரசு மருத்துவமனையை நாடி வரும் நோயாளிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
இந்த நிலையில், வேலூர் மருத்துவமனையில் பணியின் போது இல்லாத மூன்று டாக்டர்களை நேற்று முன்தினம் பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர்.
இதுகுறித்து, மதுரையில் அரசு டாக்டர்கள் சங்க மாநில செயலர் செந்தில் கூறுகையில், 'சம்பந்தப்பட்ட டாக்டர்கள் பணி நேரத்தில் இல்லாதது தவறு தான்.
டாக்டர்கள் மீது தவறு என்றால், உயர் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்திருக்கலாம். அதை விடுத்து, பொதுமக்களே சட்டத்தை கையில் எடுத்தது வேதனை அளிக்கிறது.
அந்த டாக்டர்களிடம் விசாரணை நடத்தி, உண்மையான காரணங்களை கண்டறிந்து, அது ஏற்கக் கூடியதாக இல்லாத பட்சத்தில் நடவடிக்கை எடுக்கலாம். இதற்கு சங்கம் எந்த வகையிலும் ஆட்சேபம் தெரிவிக்காது.
பணியின் போது வெளியில் செல்லும் டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுத்தால், அதில் சங்கம் தலையிடாது' என்றார்.












Click it and Unblock the Notifications