சென்னை, வேலூர் எம்பி தொகுதிகளில் 21 பேர் தேர்தலில் போட்டியிட தடை
சென்னை: சென்னை மற்றும் வேலூர் எம்பி தொகுதிகளில் போட்டியிட்ட 21 வேட்பாளர்கள், தேர்தல் செலவுக் கணக்கைத் தாக்கல் செய்யாததால், அடுத்த 3 ஆண்டுகளுக்கு எந்த தேர்தலிலும் போட்டியிடக் கூடாது என்று தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா வெளியிட்ட அறிக்கை:
கடந்த 2009ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது, தமிழகத்தில் வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, அரக்கோணம் மற்றும் வேலூர் தொகுதிகளில் போட்டியிட்ட சில வேட்பாளர்கள், சொத்து கணக்கினை தாக்கல் செய்யவில்லை.
சிலர் தாக்கல் செய்த சொத்து கணக்குகள் சரியானதாக இல்லை. இதன் அடிப்படையில், வடசென்னை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட புளியந்தோப்பு முகமது அப்துல்லா, கொசப்பேட்டை கதிரவன், கண்ணதாசன் நகர் நிர்மல் குமார், பெரம்பூர் வி.பாஸ்கரன்,
தென்சென்னை தொகுதியில் போட்டியிட்ட சைதாப்பேட்டை பாலன், சைதாப்பேட்டை பாலசுப்பிரமணியன், சைதை குமார், ராஜா முத்தையாபுரம் ராஜா மற்றும் திருவான்மியூர் மாத்துக்கரசு
மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட்ட திருவல்லிக்கேணி ரங்கநாதன், அரும்பாக்கம் தாமோதரன், அரும்பாக்கம் லோகநாதன், விருகம்பாக்கம் வில்சன் பால், அரக்கோணம் தொகுதியில் போட்டியிட்ட பட்டாபிராமபுரம் சீனிவாசன், ஷெனாய் நகர் பழனி, உரியூர்குப்பம் மேத்யூ,
வேலூர் தொகுதியில் போட்டியிட்ட ராமன், சுரேஷ்குமார், நாராயணன் மற்றும் மன்சூர் அகமது உள்பட 21 பேர் 3 ஆண்டுகளுக்கு எந்த தேர்தலிலும் போட்டியிட தடை விதிக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.