மருத்துவ மாணவர்களின் ஆடை கட்டுப்பாடு குறித்து முடிவெடுக்கவில்லை: அமைச்சர்
சென்னை: மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களின் ஆடை கட்டுப்பாடு குறித்து அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
டாக்டர் எம்ஜிஆர் மருத்துவக் கல்லூரியில் மாணவ, மாணவிகள் அணிய வேண்டிய ஆடைகள் குறித்தும், நகை ஆபரணங்கள் அணிவது தொடர்பாகவும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதற்கு மாணவர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திடம் இதுபற்றி கேட்டபோது,
'மருத்துவக் கல்லூரி மாணவ-மாணவிகள் சுய கட்டுப்பாட்டுடன் இருந்தால் போதும். அவர்களுக்கு ஆடை கட்டுப்பாடு கொண்டு வருவது பற்றி அரசு இன்னும் சிந்திக்கவே இல்லை, முடிவும் எடுக்கவில்லை.
வேலூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் 3 டாக்டர்கள் பணியில் இருந்தபோது அனுமதி இன்றி வெளியே சென்றதால் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.
இது போல மற்ற மருத்துவமனைகளிலும் நடைபெறாமல் இருக்க டாக்டர்கள் பணிக்கு வரும் நேரத்தையும் பணிமுடிந்து வெளியே செல்லும் நேரத்தையும் பதிவு செய்யகூடிய புதிய முறை (பயோ மெட்ரிக்) கொண்டுவரப்படும்.
ஆசியாவில் முதல் முதலாக நடைபெறும் சர்வதேச சுகாதாரத் துறை மாநாடு சென்னை அருகே கேளம்பாக்கத்தில் செட்டிநாடு ஹெல்த் சிட்டியில் மே மாதம் 7 மற்றும் 8ம் தேதியிலும் நடைபெறுகிறது.
9 மற்றும் 10ம் தேதிகளில் மகாபலிபுரத்தில் உள்ள ரேடிசன் ரிசார்ட் டெம்பிள் பே என்ற ஹோட்டலிலும் நடைபெறுகிறது. மொத்தத்தில் 4 நாட்கள் நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள முன்னோடி சுகாதார திட்டங்களை பிற மாநிலங்களிலும் மட்டுமல்லாமல் பிற நாடுகளும் பகிர்ந்து கொள்வதற்காக இந்த மாநாடு நடத்தப்படுகிறது.
சுகாதாரத் துறையை உலக அளவில் மேம்படுத்துவது குறித்து பல்வேறு முடிவுகள் எடுக்கப்படும். இந்த மாநாட்டில் உலக நாடுகளில் இருந்து மருத்துவ வல்லுனர்களும் நிபுணர்களும் திட்ட மேலாளர்களும் நிதி வழங்கும் நிறுவன பிரதிநிதிகளும் அரசுத்துறை அலுவலர்களும் கலந்து கொண்டு ஆலோசனை வழங்க உள்ளனர்' என்றார்.












Click it and Unblock the Notifications