நோக்கியா சீமன்ஸ் விரிவாக்க திட்டம் - மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தை அடுத்த ஒரக்கடத்தில் நோக்கியா சீமன்ஸ் நிறுவனத்தின் விரிவாக்க திட்டத்தை தமிழக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
விழாவில் ஸ்டாலின் பேசுகையில், 'கடந்த 2008 ம் ஆண்டு தமிழக அரசுடன் நோக்கியா சீமன்ஸ் நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்து கொண்டன.
இதன் மூலம் ரூ.300 கோடி முதலீடு செய்து 400 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பை இந்த நிறுவனம் வழங்கியுள்ளது.
அடுத்த 2 ஆண்டுகளில் ரூ.105 கோடி முதலீடு செய்து 500 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பையும், 700 பேருக்கு மறைமுக வேலை வாய்ப்பையும் இன்னும் 2 ஆண்டுகளில் இந்த நிறுவனம் ஏற்படுத்தி தர இருக்கிறது.
இந்திய தொலைத்தொடர்பு தேவைக்கேற்ப நோக்கியா சீமன்ஸ் நிறுவனம் தனது வளர்ச்சியை படிப்படியாக அதிகரிக்கும். இந்திய தொலைத்தொடர்புத் துறை மிக வேகமாக வளர்ந்து வருகிறது.
உலகிலேயே 2வது பெரிய தொலைத்தொடர்பு வர்த்தகத்தை செய்யும் நாடாக இந்தியா முன்னேறி வருகிறது.
தொலைத்தொடர்புத் துறை ஒழுங்கு முறை ஆணையத்தின் அறிக்கையின் படி கடந்த 2010ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை தொலைத்தொடர்புத் துறைக்கு 60 கோடி வாடிக்கையாளர்கள் கிடைத்துள்ளனர்.
மொபைல் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையிலும் உலக அளவில் இந்தியாவே முன்னிலையில் இருக்கிறது.
இன்று தொடங்கப்பட்ட விரிவாக்கத்தின் மூலம் 3ஜி ரேடியோ கருவி, 3 ஜி மைக்ரோ வேவ்ஸ், 3ஜி போக்குவரத்து உபகரணம் ஆகியவற்றை இந்த நிறுவனம் உற்பத்தி செய்யும்.
கிராம மக்கள் பயன்படுத்தும் வகையில் 3ஜி சேவை அமையும். நோக்கியா சீமன்சின் அடுத்த விரிவாக்கமும் விரைவில் தொடங்க வேண்டும் என்பதே எனது ஆசை.
இந்த நிகழ்ச்சியின் வாயிலாக தொழில் துறையை சேர்ந்தவர்களை தமிழகத்தில் தொழில் தொடங்கவும், முதலீடு செய்யவும் அழைக்கிறேன்' என்றார்.












Click it and Unblock the Notifications