2012 அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடவில்லை- இந்தியர் பாபி ஜிண்டால்
நியூயார்க்: அமெரிக்க அதிபர் போட்டியில் பங்கேற்கவில்லை என்று இந்திய அமெரிக்கரும், லூசியானா மாகாண ஆளுநருமான பாபி ஜிண்டால் கூறியுள்ளார்.
அமெரிக்காவில் வரும் 2012 தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பில் அதிபர் வேட்பாளராக லூசியானா மாகாண ஆளுநரும், இந்திய அமெரிக்கருமான பாபி ஜிண்டால் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
ஆனால் அமெரிக்க அதிபர் போட்டியில் தான் பங்கேற்கப் போவதில்லை என ஜிண்டால் அறிவித்துள்ளார்.
நியூஆர்லியன்ஸில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஜிண்டால் இதுபற்றி குறிப்பிடுகையில்,
'ஜனநாயக கட்சியினரின் அகம்பாவத்தை எங்களால் நீக்க முடியாது. ஆனால் வரும் நவம்பர் மாதத்தில், அவர்களின் அதிகாரத்தை குடியரசுக் கட்சியனராகிய நாங்கள் எடுத்துவிடுவோம்.
அதிபர் போட்டியில் நான் இடம் பெறவில்லை. ஏனெனில் எனக்கு ஏற்கனவே வேறு பொறுப்புகள் உள்ளன' என்றார்.
இதனால், ஒபாமாவை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் வேட்பாளர் சாரா பாலின் நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.