போலி வைட்டமின் மாத்திரைகளை வாங்கி விற்ற மீனாட்சி சுந்தரத்தின் மேனேஜர் கைது
சென்னை: காலாவதி மருந்து வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனா ஹெல்த்கேர் நிறுவனத்தின் அதிபர் மீனாட்சி சுந்தரத்தின் மேனேஜர் முனுசாமி என்பவர் போலி வைட்டமின் மாத்திரை விற்பனை தொடர்பாக போலீஸார் இன்று கைது செய்தனர்.
காலாவதி மருந்து விற்பனை மற்றும் போலி மருந்து விற்பனை வழக்குகளில் சரமாரியாக பலரும் கைதாகி வருகின்றனர். தினசரி கைது சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் இன்று முனுசாமி என்பவரைப் போலீஸார் கைது செய்தனர். இவர் போலி வைட்டமின் மாத்திரைகளை, சஞ்சய்குமார் உள்ளிட்டோரிடம் வாங்கி விற்பனை செய்து வந்துள்ளார்.
காலாவதி மருந்து வழக்கில் சிக்கிய மீனாட்சி சுந்தரத்தின் மேனேஜர் இவர். சஞ்சய் குமார் ஏற்கனவே காலாவதி மருந்து வழக்கில் கைதாகி உள்ளே இருப்பவர் ஆவார்.
முனுசாமியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கவுள்ள போலீஸார் அவரை காவலில் எடுத்து தீவிரமாக விசாரிக்கவுள்ளனர்.
சத்து மாத்திரை என்ற பெயரில் விற்கப்படும் இந்த வைட்டமின் மாத்திரைகளில் வெறும் சுண்ணாம்பை மட்டும் கலந்து மாத்திரையாக விற்று மோசடி செய்து வந்துள்ளனர் இந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.
இதற்கிடையே ராமு என்பவரைத் தேடி ஆந்திராவுக்கு ஒரு போலீஸ் படை விரைந்துள்ளதாக சிபிசிஐடி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications