வாசன் கோஷ்டியைச் சேர்ந்த யுவராஜா தமிழக இளைஞர் காங். தலைவராக தேர்வு
திருச்சி: தமிழக இளைஞர் காங்கிரஸ் கட்சிக்கு கடந்த சில மாதங்களாக தேர்தல் நடந்து வந்த்து. நேற்று கிளைமாக்ஸ், அதாவது தலைவர் பதவிக்கான தேர்தல் நடந்தது.
பல்வேறு கட்டங்களாக நடந்த தேர்தலின்போது தேர்வு செய்யப்பட்ட 4225 பேர் இந்த தேர்தலில் வாக்களித்தனர். மாலையில் வாக்குப்பதிவு நடந்தது. பின்னர் வாக்குகள் எண்ணப்பட்டு நள்ளிரவு வாக்கில் முடிவு அறிவிக்கப்பட்டது.
இதில் ஈரோடு மாவட்டம் செங்கோடம்பாளையத்தைச் சேர்ந்த யுவராஜா என்கிற ராஜா தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அவருக்கு 1327 வாக்குகள் கிடைத்தன.
அவருக்கு அடுத்த இடத்தை ராமநாதபுரத்தைச் சேர்ந்த வரதராஜன் என்பவர் பெற்றார். அவருக்க 1023 வாக்குகள் கிடைத்தன. இவர் கார்த்தி சிதம்பரம் கோஷ்டியைச் சேர்ந்தவர் என்று தெரிகிறது. இவர் துணைத் தலைவராக அறிவிக்கப்பட்டார்.
3வது இடத்தைப் பிடித்த மகேந்திரனுக்கு 276 வாக்குகள் கிடைத்தன. இவர் பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டார். இவர் தவிர பிரபு, காயத்ரி, அப்பாஸ், இளஞ்செழியன், சத்யா, அர்த்தநாரி ஆகியோரும் பொதுச் செயலாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
இந்தத் தேர்தலுக்கு முன்னதாக எம்.பி தொகுதி தலைவர் பதவிக்கான தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டது. இதில் 60 சதவீத இடங்களை வாசன் கோஷ்டியினரே கைப்பற்றியுள்ளனர்.
மொத்தம் உள்ள 39 தொகுதிகளில் 38 தொகுதிகளுக்கு தெளிவான முடிவு கிடைத்த்து. கோவையில் மட்டும் போட்டியிட்ட கல்யாண்குமாரும், சச்சிதானந்த குமாரும் தலா 51 வாக்குகளைப் பெற்றனர். இதையடுத்து டாஸ் போட்டு கல்யாண் குமார் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
நேற்றைய தேர்தலின் மூலம் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் தேர்தல் முடிவுக்கு வந்துள்ளது. இத்தேர்தலில் வாசன் கோஷ்டியினரை தலைவர் பதவி உள்பட முக்கியப் பதவிகளைக் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. தேர்தல் வெற்றியை வாசன் ஆதரவாளர்களும் வென்றவர்களின் ஆதரவாளர்களும் பட்டாசுகளை வெடித்துக் கொண்டாடினர்.












Click it and Unblock the Notifications