மாஸ்டர் கார்டு நிறுவனத் தலைவராக இந்தியாவின் அஜய் பங்கா!

புனே நகரைச் சேர்ந்த அஜய் பங்கா, டெல்லியில் படித்தவர். அகமதாபாத் ஐஐஎம்மில் உயர் படிப்பு முடித்தவர்.
பொதுவாக இம்மாதிரி சர்வதேச நிறுவனப் பொறுப்புகளுக்கு தேர்வு செய்யப்படும் அதிகாரிகள் வெளிநாட்டில் ஒரு பட்டமாவது பெற்றிருப்பார்கள். ஆனால் பங்கா முழுக்க முழுக்க இந்தியாவிலேயே படித்துப் பட்டம் பெற்றவர்.
நெஸ்லே நிறுவனத்தில் தனது கேரியரைத் துவக்கிய அஜய் பங்கா, பின்னர் சிட்டி குரூப்பில் சேர்ந்தார். 2005 வரை சிட்டி குரூப்பில் தான் பல்வேறு பொறுப்புகளில் இருந்தார்.
மாஸ்டர்கார்டில் தலைவர் மற்றும் சிஓஓ பொறுப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் சேர்ந்தார் அஜய் பங்கா.
வருகிற ஜூலை 1ம் தேதி, மாஸ்டர்கார்டின் தற்போதைய சிஇஓ ராபர்ட் செலாண்டர் பதவி விலகுகிறார். அன்றே அஜய் பங்கா பொறுப்பேற்கிறார்.
சிஇஓவாக பொறுப்பேற்ற பிறகும் மாஸ்டர்கார்டு தலைவர் பதவியில் இவர் தொடர்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாஸ்டர் கார்டின் தலைவர் - சிஇஓவாக அஜய் பங்கா பொறுப்பேற்றுள்ளது, இந்திய சிஇஓக்கள் மீது சர்வேதச நிறுவனங்கள் கொண்டுள்ள நம்பிக்கையைக் காட்டுவதாக கார்ப்பரேட் துறையினர் கருத்து தெரிவித்துள்ளனர்.
அஜய் பங்கா சீக்கிய இனத்தைச் சேர்ந்தவர். இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அமெரிக்காவில் கால் வைத்த நாளன்றே, அஜய் பங்காவின் பெயரை சிஇஓவாக மாஸ்டர் கார்டு அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
அஜய் பங்காவின் முன் இப்போதுள்ள ஒரே சவால், தங்களுக்கு சற்று முன்னே பயணிக்கும் விசா கார்டு நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளவேண்டும் என்பதே!












Click it and Unblock the Notifications