ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம் - ஊட்டி இளைஞர் தற்கொலை
ஊட்டி: ஐபிஎல் கிரிக்கெட் விளையாட்டுப் போட்டியை மையாக கொண்டு ஊட்டியில் நடைபெற்ற சூதாட்டத்தில் இளைஞர் தற்கொலை செய்து இறந்தார்.
நீலகிரி மாவட்டம் ஊட்டி பெரிய பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் வேலாயுதன். இவரது மகன் மகேஷ் (32). இவர், ஜாலி டிராவல்ஸ் என்ற நிறுவனம் நடத்தி வருகின்றார்.
இந்த நிலையில், நேற்று காலை தனது அறையில் மகேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஊட்டியில் நடந்த கிரிக்கெட் சூதாட்டத்தின் காரணமாக, மகேஷ் தற்கொலை செய்து கொண்டதாக அவரது உறவினர்கள் கூறினர்.
மேலும், கிரிக்கெட் சூதாட்டம் நடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி, மகேஷின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்தனர்.
பின்பு போலீசார் சமரசம் பேசியதை தொடர்ந்து அவரது உடலை பெற்றுக் கொண்டனர். இந்த சம்பவம் குறி்த்து ஊட்டி போலீசார் கூறுகையில்,
'மகேஷ் மெயின் பஜாரில் உள்ள நேமிசந்த், பிரகாஷ் ஆகியோரிடம் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. பணம் கேட்டு பிரகாஷ் மிரட்டியதால் செய்வதறியாது மகேஷ் தற்கொலை செய்து கொண்டார் என கூறப்படுகிறது.
ஆனால், மகேஷ் தன் காதலியிடம் 13 சவரன் நகை பெற்று அடகு வைத்தது தெரிய வந்துள்ளது. பணத்தை வரும் 15ம் தேதி திருப்பி கொடுத்து விடுவதாகவும் உறுதியளித்துள்ளார்.
நேற்று இரவு இருவரும் மொபைல் போனில் பேசியுள்ளனர். காலையில் மகேஷை தொடர்பு கொள்ள முயற்சித்தார். நீண்ட நேரமாக மகேஷ் பேசாததால், டிராவல்சுக்கு போன் செய்து வீட்டில் சென்று பார்க்க கூறியுள்ளார்.
டிராவல்சிலிருந்து சிலர் மகேசின் வீட்டுக்கு சென்று பார்த்த போது, மகேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளது' என்றனர்.












Click it and Unblock the Notifications