மாஜி முதல்வரானாலும், நீதிபதியானாலும் தலித் நில ஆக்கிரமிப்பை ஏற்க முடியாது - கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
சென்னை : முதல்வரானாலும் சரி, நீதிபதியானாலும் சரி தலித் மக்களின் நிலங்களை அபகரிப்பதை ஏற்க முடியாது. அதை மீட்க வேண்டியது எனது கடமை என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

நேற்று அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சென்னை அருகே மறைமலை நகர் அருகே மாநாடு நடைபெற்றது. அதில், முதல்வர் கருணாநிதிக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டது.

அதேபோல தி.கி தலைவர் கி.வீரமணிக்கு பெரியார் ஒளி விருதும், கிருஷ்ண்ம்மாள் ஜெகநாதனுக்கு காமராஜர் கதிர் விருதும், கவிஞர் அப்துல் ரகுமானுக்கு காயிதே மில்லத் பிறை விருதும், அலோய்சியஸுக்கு அயோத்திதாசர் ஆதவன் விருதும், மறைந்த தமிழறிஞர் தேவநேயப் பாவாணருக்கு செம்மொழி ஞாயிறு விருதும் வழங்கப்பட்டது. பாவாணாருக்கான விருதை அவரது மகன் தேவமணி பெற்றார்.

விருதினைப் பெற்றுக் கொண்டு முதல்வர் கருணாநிதி ஆற்றிய ஏற்புரை

மறைமலை நகர், தமிழர்களின் சமூக ஒற்றுமையை, இன எழுச்சியை, மொழிப்பற்றை எடுத்து விளக்கும் பெயராகும். இந்த பெயரால், தி.மு.க. ஆட்சி தொடங்கியவுடனே சென்னை சைதாப்பேட்டையில் மறைமலை அடிகள் பாலம் உருவாக்கப்பட்டது. அதையடுத்து சென்னை மக்களின் நெருக்கடியை குறைப்பதற்காக புறநகரில் அமைக்கப்படும் துணை நகரத்துக்கு என்ன பெயர் சூட்டலாம் என்று யோசித்தபோது நாங்கள் தெரிவித்த பெயர்தான் மறைமலைநகர்.

தனித்தமிழுக்கு பெருமை சேர்த்த மறைமலை அடிகளார் பெயருக்கு புகழ் சேர்க்கும் வகையில் மக்கள் கடலைக் கூட்டி மாநாடு போல் நடக்கும் இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்த தம்பி திருமாவளவனுக்கும், அவருடன் இணைந்து பணியாற்றிய ரவிக்குமார் போன்ற அருமை தோழர்களுக்கும், நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். விருதினை நாங்கள் பெற்றுக் கொண்டதற்காக நன்றி தெரிவிப்பதாக திருமாவளவன் சொன்னார். நாங்களும் அவருக்கும், இந்த அமைப்புக்கும், நன்றி தெரிவித்துகொள்கிறோம்.

இங்கு வழங்கப்பட்ட அனைத்து விருதுகளும் ஒளிமயமான விருதுகள்தான். எனக்கு அம்பேத்கார் சுடர் விருது வழங்கப்பட்டது. சுடர் என்றாலும் ஒளி என்றாலும் ஒன்றுதான். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு பெரியார் ஒளி விருது வழங்கப்பட்டது. சுடருக்கு ஒளி என்ற பெயரும் உண்டு. கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதனுக்கு காமராஜர் கதிர் விருது வழங்கியுள்ளனர். கதிர் என்றாலும் ஒளிதான். கவிஞர் அப்துல் ரகுமானுக்கு காயிதே மில்லத் பிறை விருது வழங்கப்பட்டுள்ளது. பிறைக்கு ஒளி உண்டு.

ஞான.அலாய்சியசுக்கு அயோத்திதாசர் ஆதவன் விருது வழங்கியிருக்கிறார்கள். ஆதவனும் ஒளி வழங்கக்கூடியது. தேவநேய பாவாணருக்கு, செம்மொழி ஞாயிறு விருது வழங்கியிருக்கிறார்கள். ஞாயிறு என்றால் சூரியன்தான். அதுவும் ஒளிதான். எனவே இங்கு எல்லோருக்கும் ஒளிமயமான விருதுகளை திருமாவளவன் வழங்கியிருக்கிறார்.

இந்த விழாவில் அவர் பேசும்போது சில கோரிக்கைகளை முன்வைத்தார். அவற்றை தேர்தல் வாக்குறுதிகளாக மாற்ற விரும்புகிறேன். தற்போது, சட்டமன்றம் நடந்து கொண்டிருப்பதால், கோரிக்கைகளை நிறைவேற்றுவதை பற்றி அறிவிக்க முடியாது.

6-வது முறையும் நான்தான் முதல்வராவேன் என்று தம்பி திருமாவளவன் உறுதிபட கூறியுள்ளார். அப்படி வரும்போது, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேறும். உங்களது கோரிக்கைகள் அனைத்தையும் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கத் தயாராக இருக்கிறேன். இங்கு பேசிய கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதன், திருக்குவளை என்ற எனது சொந்த ஊர், என்னால் பெருமை அடைந்துள்ளதாக கூறினார். அவரும், என் அருமை நண்பர் ஜெகன்னாதனும், அடிக்கடி அங்கு வருவார்கள். என்னோடு நட்பு வைத்திருந்த அவர்கள், ஏழை மக்களுக்காக கோரிக்கை வைத்து, அதை நிறைவேற்றிக் கொடுப்பார்கள்.

அவருக்கு பிடித்தமான முக்கியமான கருத்து ஒன்றை சொன்னார். யாரோ ஒரு புண்ணியவதி ஒடுக்கப்பட்ட மக்களின் நிலத்தை தன் பெயருக்கு மாற்றிக் கொண்டிருப்பதாக கூறினார். அப்படி செய்தது கண்டிக்கத்தக்கது என வெளிப்படையாக சொல்கிறேன்.

முன்னாள் முதல்-அமைச்சர், சிறுதாவூரில் தலித் மக்களுக்கு வழங்கப்பட்ட பஞ்சமி நிலங்களை அபகரித்து ஆதிதிராவிட மக்களை விரட்டிவிட்டு வீடு கட்டியுள்ளார் என்று புகார் மனு கொடுக்கப்பட்டது. அது பற்றி விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. அது தொடர்பான கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதனுக்கு தெரியவில்லை. இது பற்றிய விவரங்களை திருமாவளவனிடம் அவர், கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

ஒடுக்கப்பட்ட மக்களின் நிலங்களை யார் அபகரித்தாலும் அவர்கள் முன்னாள் முதல்வராக இருந்தாலும், நீதிபதியாக இருந்தாலும், அந்த நிலங்களை மீட்டுக் கொடுக்க வேண்டிய கடமை எனக்கும் திருமாவளவனுக்கும், கிருஷ்ணம்மாள் ஜெகன்னாதனுக்கும் இருக்கிறது.

பாயில் படுக்க வழியில்லை. தரையில் படுத்து உறங்குகிறோம். வீடு இல்லை என்பது போன்றவற்றை திருமாவளவன் பேசினார். காலம் மாறுவதற்காக கழகம் பாடுபடுகிறது. அதை நம்பித்தான் திருமாவளவன் என்னுடன் கைகோர்த்துள்ளார். வெள்ளைக்காரர்களிடமிருந்து விடுதலை பெற்றுவிட்டோம். சமுதாய கொள்ளைக்காரர்களிடமிருந்து விடுதலை பெறவேண்டியுள்ளது. அதை பெறவும், திராவிடர் கழகமும், தி.மு.க.வும் உறுதியளித்துள்ளது. இங்கு எனக்கு வழங்கப்பட்ட விருதை சாதாரண விருது என கருதமாட்டேன். சகோதரன் அளித்த விருதாக கருதுவேன் என்றார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+