ஐபிஎல் தலைமையகத்தில் வருமான வரி ரெய்ட்!

தற்போது நடந்து வரும் 3வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் மூலம் சுமார் ரூ. 4 ஆயிரத்து 500 கோடிக்கு மேல் ஐபிஎல் அணிக்கு வருமானம் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் மத்திய வருமான வரித்துறைக்கு நேரடி மற்றும் மறைமுக வரியாக ரூ.300 கோடி வரை கிடைக்க வேண்டும்.
ஆனால் அணி உரிமையாளர்கள் சிலர் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக புகார்கள் வெளியாயின. அதோடு, ஐபிஎல் தலைவர் லலித் மோடியின் உறவினர்கள் மூவர், ஐபிஎல் வர்த்தகத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இது தவிர ரூ 15000 கோடி மதிப்புள்ள ஐபிஎல் வர்த்தக சாம்ராஜ்யத்தில், லலித் மோடியின் நெருங்கிய உறவினர்கள் மேலும் சிலர் இருப்பது அம்பலமாகியுள்ளது.
ஐபிஎல் அணி உரிமையாளர்கள் சிலருடைய பெயர் மட்டுமே வெளிப்படையாக தெரிகிறது. ஒவ்வொரு அணியிலும் பல பங்குதாரர்கள் உள்ளனர். அவர்களில் வெளிநாடுகளில் தொழில் அதிபர்களாக இருக்கும் பலரும் உள்ளனர்.
அணிகளுக்கு எந்தெந்த வகையில் வருமானம் வருகிறது. அந்த அணி உரிமையாளர்கள் எப்படி பிரித்து கொள்கிறார்கள் என்பதில் முறையான கணக்குகள் காட்டப்படுவது இல்லை.
எனவே இதுபற்றி வருமான வரித்துறை கடந்த சில நாட்களாக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தது.
இந்நிலையில் இன்று மாலை மும்பையில் பிசிசிஐ வளாகத்தில் உள்ள ஐபிஎல் தலைமையகத்தில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தினர்.
சோதனை பற்றிய தகவல்களை அதிகாரிகள் உடனடியாக வெளியிடவில்லை. இதற்கிடையே ஐபிஎல் சாம்ராஜ்ஜியத்தில் லலித் மோடியின் உறவினர்களின் ஆதிக்கமே நிறைந்து இருப்பது குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகின்றன.
வரும் 2017 வரை நடக்கும் ஐபிஎல் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டிகளுக்கான டிஜிட்டல் மற்றும் மொபைல் ஒளிபரப்பு உரிமை பெற்றுள்ள குளோபல் கிரிக்கெட் வென்ச்சர்ஸ் நிறுவனம் லலித் மோடியின் மருமதன் கவுரவ் பர்மனுக்குச் சொந்தமானது.
கவுரவ் பர்மனின் சகோதரர் மோகித் பர்மன்தான் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் இன்னொரு உரிமையாளர். குளோபல் கிரிக்கெட் வென்ச்சர்ஸ் நிறுவனத்திலும் இவருக்கு 50 சதவிகித பங்குகள் உள்ளன. எலிபென்ட் கேபிடல் எனும் நிறுவனத்தின் பெயரில் இந்த பங்குகளைப் பெற்றுள்ளார் மோகித் பர்மன்.
ஆன்லைன் நிறுவனமாக துவங்கப்பட்ட இந்த குளோபல் கிரிக்கெட் வென்ச்சர்ஸ், மிகக் குறுகிய காலத்திலேயே ஐபிஎல் உரிமையைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் போட்டிகள் தொடர்பான ஆன்லைன் நேரடி ஒளிபரப்பு, படங்கள் தருவது போன்றவற்றுக்கான முழு உரிமையும் இந்த நிறுவனத்துக்கே தரப்பட்டுள்ளது.
இந்த நேரடித் தொடர்புகள் பற்றி லலித் மோடியிடம் கேட்டதற்கு, 'குளோபல் கிரிக்கெட் வென்ச்சரில் என் மருமகன் இயக்குநர் என்பது உண்மைதான். அதற்கு நான் என்ன செய்ய முடியும்?' என்றார் (இதைத்தானே சசி தரூரும் கேட்கிறார்!).
இந்த இருவர் தவிர லலித் மோடியின் இன்னுமொரு உறவினரும் ஐபிஎல் பிஸினஸில் உள்ளாராம்.
அவர் சுரேஷ் செல்லாராம். நைஜீரியாவை மையமாகக் கொண்டு இயங்கும் இந்த இந்தியர்தான் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பெரும்பான்மைப் பங்குகளை வைத்திருப்பவர். இவர் லலித் மோடியின் மைத்துனர்.. அதாவது சகோதரியின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இதுவரை இந்த மூன்று உறவினர்களுக்கும் உள்ள தொடர்புகள் மற்றும் பங்குகள் குறித்து லலித் மோடி வாயே திறக்கவில்லை. இப்போது அனைத்து உண்மைகளும் வெளியில் வந்த பிறகு, "ஐபிஎல்லில் இந்த மூவரும் பங்கேற்றிருப்பது தற்செயலானது" என்று கூறியுள்ளார் லலித் மோடி.
"அவர்கள் அனைவரும் பெரும் வர்த்தகப் பிரமுகர்கள். ஐபிஎல்லில் ஏதேனும் ஒரு வகையில் வணிகத் தொடர்புகளை வைத்திருக்க அவர்கள் நினைத்ததில் என்ன தவறு இருக்க முடியும்!" என்கிறார் மோடிக்கு நெருக்கமான ஒருவர்.
ஐபிஎல் வர்த்தகம் தொடர்பான எந்த தகவலையும் தாம் கிரிக்கெட் வாரியத்திடமிருந்து மறைக்கவில்லை என்கிறார் லலித் மோடி.
ஆனால் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமோ, குளோபல் கிரிக்கெட் வென்ச்சர் நிறுவனத்தின் உரிமையாளர்களில் மோடியின் மருமகனும் ஒருவர் என்ற விவரமே தங்களுக்குத் தெரியாது என்று கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications