மே.வங்கம், பீகார், அஸ்ஸாமில் கடும் சூறாவளிக்கு 120 பேர் பலி -200 பேர் காயம்
புர்னியா (மேற்கு வங்கம்) : மேற்கு வங்கம், பீகார், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் வீசிய கடும் சூறாவளியில் சிக்கி 120 பேர் உயிரிழந்தனர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
மேற்கு வங்கத்தில் ஒரு மாவட்டமும், பீகாரில் ஐந்து மாவட்டங்களும், அஸ்ஸாமில் ஒரு மாவட்டமும் சூறாவளிக்குப் பாதிக்கப்பட்டுள்ளன.
மணிக்கு 125 கிலோமீட்டர் வேகத்தில் இந்த சூறாவளி வீசியது. மேற்கு வங்கத்தின் வடக்கு தினஜ்பூர் மாவட்டத்தில் மட்டும் 31 பேர் உயிரிழந்துள்ளனர். அங்குள்ள நான்கு தாலுகாக்களில் உள்ள கிராமங்கள கடும் பாதிப்பை சந்தித்துள்ளன.
இங்கு 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சூறாவளிக்கு 50 ஆயிரம் வீடுகள் சேதமடைந்துள்ளன. ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து பரிதவிப்புக்குள்ளாகியுள்ளனர்.
பீகாரில்தான் அதிகபட்சம் 77 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு ஐந்து மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மேற்கு வங்கத்தில் 39 பேரும், அஸ்ஸாமில் நான்கு பேரும் உயிரிழந்துள்ளனர்.
பீகாரின் புர்னியாவில் 33 பேரும், அராரியாவில் 33 பேரும் கத்தியாரில் 7 பேரும், சுபாலில் 2 பேரும், கிஷன்கஞ்ச்சில் 2 பேரும் இறந்துள்ளனர்.
சூறாவளி குறித்து சுதன் சஹாய் என்பவர் கூறுகையில இது அய்லா புயலைப் போல பயங்கரமாக இருந்தது. அனைவரும் மிகவும் பயந்து போய் விட்டோம் என்றார்.
சூறாவளியில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 1.50 லட்சம் வழங்க பீகார் முதல்வர் நிதீஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.
மேற்கு வங்க அரசு தலா ரூ. 2 லட்சம் நிவாரண நிதியை அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications