பெட்ரோல் பங்க்கில் நூதன மோசடி: ஊழியர்களுக்கு மக்கள் அடி-உதை
சென்னை: சென்னையையடுத்த ஆதம்பாக்கம் என்.ஜி.ஓ. காலனி பெட்ரோல் பங்கில் நூதன மோசடி நடந்து வந்ததை அறிந்த பொது மக்கள் பெட்ரோல் பங்க் ஊழியர்களை விரட்டி விரட்டி அடித்து உதைத்தனர்.
நேற்று இங்கு ரமேஷ் என்பவர் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போடச் சென்றார். ரூ. 100க்கு பெட்ரோல் ஊற்றச் சொன்னார். ஆனால், ஊழியர் பெட்ரோல் ஊற்றுவது போல 'பாவ்லா' காட்டிவிட்டு பணத்தை வாங்கிக் கொண்டார்.
ஆனால் சந்தேகமடைந்த ரமேஷ் பெட்ரோல் டேங்கை பார்த்தபோது பெட்ரோல் ஊற்றப்படாததை உணர்ந்து கேள்வி கேட்டார்.
இதையடுத்து அங்கிருந்த ஊழியர்கள் அனைவரும் ொன்று சேர்ந்து கொண்டு ரமேஷை திட்டினர்.
இதைத் தொடர்ந்து ரமேஷ் தனது உறவினர்கள், நண்பர்களை அழைத்துக் கொண்டு பெட்ரோல் பங்குக்கு வந்தார்.
அவர்கள் முன்னிலையில் பெட்ரோல் டேங்கை கழற்றி அதிலிருந்த பெட்ரோலை எடுத்து அளவு பார்த்தபோது அதில் ஒரு லிட்டருக்கும் குறைவான பெட்ரோலே இருந்தது.
இதனால் ரூ. 100க்கான பெட்ரோல் ஊற்றப்படவில்லை என்பது உறுதியானது.
இதையடுத்து ரமேஷின் உறவினர்கள் பெட்ரோல் பங்க் ஊழியர்களை விரட்டி விரட்டி அடித்து உதைத்தனர். பெட்ரோல் பங்க்கையும் இழுத்து மூடினர்.
இதுகுறித்து இந்தியன் ஆயில் கார்ப்பரேசனிடம் புகார் செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications