தமிழக அரசின் ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுர சின்னத்தை மாற்றக் கூடாது-பாஜக
சென்னை: தமிழக அரசின் சின்னமாக இருக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுர சின்னத்தை மாற்றக்கூடாது என்று முதல்வர் கருணாநிதிக்கு தமிழக பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.
அக் கட்சியின் மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:
விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. ரவிக்குமார், கடந்த 8ம் தேதி சட்டமன்றத்தில், தமிழக அரசின் லட்சிணையாக (சின்னமாக) கோவில் கோபுரம் இருக்கிறது. இதை மாற்ற வேண்டும். மதசார்பற்ற லட்சிணையை கொண்டு வர வேண்டும். திருவள்ளுவர் உருவத்தை நமது மாநிலத்தின் லட்சிணையாக கொண்டு வர வேண்டும். அதில் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்... என்ற வள்ளுவரின் வாசகம் பொறிக்க வேண்டும் என்று பேசியிருக்கிறார்.
தமிழக கட்டிடக்கலையின் பெருமையை உலகிற்கு பறைசாற்றக்கூடியவை நமது கோவில்கள். இத்தகைய கோவில்கள் காலம் காலமாக இருந்து வருகின்றன.
மதசார்பற்ற அரசின் சுற்றுலாத்துறை, வழிப்பாட்டு தலங்களை மையமாக வைத்து இயங்குவதா என்று யாரும் கேள்வி கேட்பதில்லை.
அதேபோன்று தொல்லியல்துறை ஆய்வு மேற்கொள்வதே பெரும்பாலும் கோவில்களையும், சிலைகளையும் தான். இது மதசார்ப்பற்ற அரசு என்பதால் இத்தகைய ஆராய்ச்சியை மேற்கொள்ள கூடாது என்று கூறுவாரா ரவிக்குமார்?.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக நமது மாநிலத்தின் ஆலயங்கள் தமிழக அரசின் கட்டுப்பாட்டின் கீழ் தான் உள்ளன. மதசார்பற்ற அரசுக்கு ஆலயத்தில் என்ன வேலை?. அரசு ஆலயத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று கேட்கும் தைரியம் ரவிக்குமாருக்கு இருக்கிறதா?.
மத்திய அரசின் லட்சிணைக்கூட புத்த மதத்தை சேர்ந்த அசோக சின்னத்தை கொண்டிருக்கிறது. கேரளத்தில் யானைகள் பிரபலம் என்பதால் இரண்டு யானைகள் கொண்ட சின்னம் அம்மாநில லட்சிணையாக உள்ளது. தமிழகம் கோபுரங்களுக்கு பெயர்போன மாநிலம் என்பதால் இங்கே அது நமது லட்சிணையில் சேர்க்கப்பட்டுள்ளது. நமக்கென்று தொன்றுதொட்டு இருக்கும் அடையாளமாகவே நாம் இதை பார்க்க வேண்டும்.
கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பதால் ஆண்டாள் கோபுரத்தை நேரில் பார்க்கும் மக்கள் வணங்கி செல்கிறார்கள். ஆனால் தமிழக அரசின் லட்சிணையாக இருக்கும் கோபுரத்தை யாரும் வணங்குவதில்லை, இது நமது பண்பாட்டு அடையாளமாகத்தான் பார்க்கப்படுகிறது. இதை ரவிக்குமார் புரிந்துகொள்ள வேண்டும்.
தமிழக அரசிற்கு இந்த விஷயங்கள் நன்கு புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். நமது லட்சிணையை மாற்ற முதல்வர் விரும்ப மாட்டார் என்றும் நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications