ரூ.15 கோடி கள்ளநோட்டு புழக்கம் - ரிசர்வ் வங்கி அதிகாரி தகவல்
மதுரை: இந்தியாவில் உள்ள பணப்புழக்கத்தின் மதிப்பு ஏழு லட்சத்து 12 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். இதில் 15 கோடி ரூபாய் கள்ள நோட்டுகள் என்று ரிசர்வ் வங்கி சென்னைப் பிரிவு உதவி மேலாளர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்.
அனைத்து வங்கி அலுவலர்களுக்கான கள்ள நோட்டுகள் கண்டறிதல், மற்றும் பழுதடைந்த நோட்டுகளை மதிப்பிடுதல் குறித்த பயிற்சி முகாம் மதுரையில் நடைபெற்றது.
இந்த முகாமில் ரிசர்வ் வங்கி சென்னைப் பிரிவு உதவி மேலாளர் நந்தகுமார் கலந்து கொண்டு பேசுகையில், 'இந்தியாவில் உள்ள பணப்புழக்கத்தின் மதிப்பு ஏழு லட்சத்து 12 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். இதில் 15 கோடி ரூபாய் கள்ள நோட்டுகள்.
ரிசர்வ் வங்கி 2005 ம் ஆண்டுக்கு பின் வெளியிட்ட ரூபாய் நோட்டுகள், அதிக பாதுகாப்புக்குரியதாக இருப்பதால் கள்ளநோட்டுகள் அடிப்பது கடினம்.
அந்தளவுக்கு பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. தொடர்ந்து விழிப்புணர்வு முகாம்களை ஏற்படுத்தி வருகிறோம். இதற்காக 25 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
முன்பு, பழுதடைந்த மற்றும் கிழிந்த ரூபாய் நோட்டுகளில் வரிசை எண் இருந்தால் மட்டுமே, அதற்குரிய பணம் தரப்பட்டது.
தற்போது கிழிந்த, சேதமடைந்த நோட்டுகளில் வரிசை எண் தேவையில்லை. நோட்டின் கிழிந்த பகுதி பெரியதாக இருந்தால், அந்த அளவுக்கேற்ப 50 சதவீதம் அல்லது முழு மதிப்பு தரப்படுகிறது.
அதிக எண்ணிக்கையில் கிழிந்திருந்தால் பணம் தரப்படாது. தீயில் சேதமடைந்த நோட்டுகளை நேரடியாக ரிசர்வ் வங்கிக்கு இன்ஷ்யூர்ட் தபாலில் அனுப்பலாம்' என்றார்