ரூ. 8 லட்சம் மோசடி – பஞ்சாயத்துத் தலைவி உள்பட 3 பேர் கைது
அம்பாசமுத்திரம்: ரூ. 8 லட்சம் முறைகேடு புகாரில் சிக்கிய வெள்ளங்குளி பஞ்சாயத்துத் தலைவி மற்றும் துணை தலைவர் உள்பட 4 பேர் இன்று அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
நெல்லை மாவட்டம் அம்பை ஊராட்சி ஓன்றியத்தில் உள்ளது வெள்ளங்குழி பஞ்சாயத்து. இதன் தலைவராக காந்திமதி, துணை தலைவராக வெங்கடாஜலபதி உள்ளனர்.
இந்த பஞ்சாயத்தில் பல முறைகேடுகள் நடப்பதாக அம்பை வட்டார வளர்ச்சி அலுவலர் கோபாலகிருஷ்ணனிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதை தொடர்ந்து அவரது தலைமையில் அதிகாரிகள் சங்கரசுப்பிரமணியன், கோமதி, வேல்சாமி, முத்துகுமார் ஆகியோர் கடந்த மாதம் பஞ் அலுவலத்தை ஆய்வு செய்தனர்.
18 மணி நேரம் கணக்குகளை தணிக்கை செய்தனர். இதில் ஊரக வேலை திட்டம், இந்திரா நினைவு குடியிருப்பு திட்டம், அண்ணா மறுமலர்ச்சி திட்டம், ஊரக உட்கட்டமைப்பு திட்டம், மற்றும் பஞ்சாயத்து அடிப்படை திட்டங்கள், செக் மோசடி, வரி விதிப்பு மோசடி, செலவினங்களில் முறைகேட்டால் இழப்பு ஆகியவற்றின் மூலம் ரூ.8 லட்சத்து 24 ஆயிரம் ஊழல் நடைபெற்றிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இதையறிந்த பஞ் தலைவி காந்திமதி, துணை தலைவர், ஊழியர் கமலக்கண்ணன் ஆகியோர் தலைமறைவானார்கள்.
இதற்கிடையே பஞ் தலைவர் காந்திமதி மார்ச் 10ம் தேதி 1 லட்சத்து 6 ஆயிரம், எழுத்தர் கமலக்கண்ணன் மார்ச் 8ம் தேதி 3 லட்சத்து 43 ஆயிரத்து 330ஐ அம்பையில் உள்ள ஒரு வங்கியில் திருப்பி செலுத்தினர். இதன் மூலம் அவர்கள் தில்லுமுல்லி செய்தது வெளிச்சத்திற்கு வந்தது. மோசடி வெளியானதை தொடர்ந்து பஞ்சாயத்துத் தலைவி, அவருக்கு உடந்தையாக இருந்த அவரது கணவர், மற்றும் துணை தலைவர், ஊழியர் ஆகிய 4 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெல்லை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எஸ்பி ஆஸ்ரா கர்க்கிடம் மனு கொடுத்தனர். அதன்படி எஸ்பி அவர்கள் 4 பேரையும் கைது செய்யும் படி உத்தரவிட்டார்.
இதையடுத்து இன்று காலை மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையில் போலீசார் வெள்ளாங்குளி கிராமத்துக்கு சென்று மோசடி புகாரில் சிக்கிய பஞ்சாயத்துத் தலைவி, அவரது கணவர் மற்றும் துணை தலைவர், ஊழியர் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.
--












Click it and Unblock the Notifications