அனல் பறக்கும் நாடாளுமன்றம்-மாலத்தீவில் நண்பர்களுடன் அழகிரி டூர்

நாடாளுமன்றத்திற்கு சரியாக வருவதில்லை. முக்கிய விவாதங்களில் கலந்து கொள்வதே இல்லை என்று ஏற்கனவே அழகிரி மீது கடுமையான குற்றச்சாட்டுக்கள் உள்ளன. எதிர்க்கட்சியினர் மட்டுமல்லாமல், காங்கிரஸ் தலைமையும் கூட அழகிரி மீது கடும் அதிருப்தியில் உள்ளது.
இந் நிலையில் தற்போது மேலும் ஒரு புதிய சர்ச்சையாக ஐபிஎல், சசி தரூர் விவகாரம் பற்றி எரிந்து கொண்டுள்ள நிலையில் முக்கிய கேபினட் அமைச்சரான மு.க.அழகிரி, நாடாளுமன்றத்திலும், நாட்டிலும் இல்லாமல் மாலத்தீவில் நண்பர்களோடு ஹாயாக ரெட்ஸ் எடுத்துக் கொண்டிருப்பது டெல்லி வட்டாரத்தை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளதாம்.
மதுரை நகர் மாவட்ட திமுக செயலாளர் தளபதி, திமுக மத்திய கமிட்டி உறுப்பினர் சுரேஷ் பாபு, சோழவந்தான் எம்.எல்.ஏ. மூர்த்தி, மதுரை மாநகராட்சி துணை மேயர் மன்னன், ஒரு டாக்டர் உள்பட 10 பேருடன் அழகிரி மாலத்தீவுக்கு ஏப்ரல் 16ம் தேதி புறப்பட்டுச் சென்றுள்ளார்.
அழகிரியுடன் சென்றுள்ள அனைவருமே நண்பர்களாம். குடும்ப உறுப்பினர்கள் யாரும் இதில் இடம் பெறவில்லையாம்.
தனது மாலத்தீவு பயணம் குறித்து பிரதமர் அலுவலகத்திற்கு ஏற்கனவே அழகிரி தெரிவித்து விட்டாராம். அதேசமயம், அழகிரியின் மாலத்தீவு பயணம் குறித்த தகவலை வெளிப்படையாக அறிவிக்காமல் ரகசியமாக வைத்துள்ளனர். இதற்குக் காரணம், இது தனிப்பட்ட கோடை விடுமுறைப் பயணம் என்பதால் என்று கூறுகின்றனர் அழகிரி தரப்பினர்.
அதேசமயம், அழகிரியின் இந்த மாலத்தீவு பயணம் குறித்து வேறு மாதிரியான கருத்துக்களும் திமுக வட்டாரத்திலேயே கூறப்படுகிறது.
மத்திய அரசியலில் நீடிக்க விரும்பவில்லை. தமிழக அரசியலுக்குத் திரும்புவதே தனது நோக்கம் என்பதை முதல்வர் கருணாநிதிக்கு அழுத்தம் திருத்தமாக தெரிவிக்க விரும்பும் அழகிரி, கருணாநிதிக்கு அழுத்தம் கொடுப்பதற்காகவே வேண்டும் என்றே நாடாளுமன்றத்திற்குப் போகாமல் டூர் போயிருப்பதாகவும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications