நக்சலைட்டுகளுக்கு ஆயுதங்கள் கடத்தல்: எம்எல்ஏவின் கணவர் கைது
ஹைதராபாத்: ஆந்திராவில் நக்சலைட்டுகளுக்கு ஆயுதங்கள் கடத்தியதாக வாரங்கல் மாவட்டம் முழுகு தொகுதி தெலுங்குதேசம் எம்.எல்.ஏ. சீதக்காவின் கணவர் தேவேந்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆந்திர மாநிலம் மேடக் மாவட்டத்தில் நக்சலைட்டுகளுக்கு ஆயுதம் கடத்தப்படுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இந்திரகரன் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
ஜூல்கல் கிராஸ்ரோடு பகுதியில் வேகமாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் ஏகே 56, ஏகே 47 ரக துப்பாக்கிகள் உள்பட பயங்கர ஆயுதங்கள் இருந்தன.
அந்த காரில் முழுகு தொகுதி தெலுங்குதேசம் எம்.எல்.ஏ. சீதக்காவின் கணவர் தேவேந்தர் மற்றும் உத்தரபிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்த சுனில்குமார், பீகாரை சேர்ந்த அஜய்குமார் ஆகியோர் இருந்தனர்.
இவர்கள் பிரஜா பிரதிங்கட்டனா என்ற நக்சல் அமைப்பின் தலைவர் மோகனன்னாவுக்கு ஆயுதங்களை கடத்திச் செல்வது தெரியவந்தது. கூறினார்கள். இதற்காக ரூ.12 லட்சம் கமிஷன் பேசியிருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த ஆயுதங்கள் பிகாரில் இருந்து கொண்டு வரப்பட்டது தெரியவந்துள்ளது.
கணவர் கைது குறித்து எம்.எல்.ஏ. சீதக்கா கூறுகையி்ல், யார் தவறு செய்தாலும் தண்டனை அனுபவிக்க வேண்டும். என் கணவரும் அதற்கு விதிவிலக்கல்ல. சட்டத்தின் முன் அனைவரும் சமம். கணவரின் தவறுகளுக்கு நான் ஒருபோதும் துணை போக மாட்டேன் என்றார்.












Click it and Unblock the Notifications