மும்பை விமான நிலையம்: விமானங்கள் மோதல் தவிர்ப்பு
மும்பை: மும்பை விமான நிலையத்தில் ஒரே ரன்வேயில் ஒரு விமானம் தரை இறங்கவும், மற்றொரு விமானம் புறப்படவும் ஒரே நேரத்தில் அனுமதி அளித்ததால் பெரும் விபத்து நடக்க இருந்தது.
டெல்லியிலிருந்து மும்பைக்கு நேற்று மதியம் கோ ஏர் நிறுவன விமானம் வந்தது. பகல் 1.36 மணிக்கு இந்த விமானம் மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதி அளிக்கப்பட்டது.
அதே நேரத்தில் 30 பயணிகளுடன் குஜராத்தின் பாவ் நகருக்கு கிங் பிஷர் விமானம் அதே ரன்வேயில் கிளம்பவும் அனுமதி வழங்கப்பட்டது.
இதனால் ஒரே நேரத்தில் ஒரே ரன்வேயில் எதிரெதிரே ஒரு விமானம் தரை இறங்கவும், மற்றொரு விமானம் புறப்படவும் இருந்தன.
ரன்வே நோக்கி வந்து கொண்டிருந்த கிங் பிஷர் விமான விமானிகள், அதே ரன்வேயில் கோ ஏர் விமானம் தரையிறங்குவதைப் பார்த்து அதிர்ந்து விமானத்தை உடனே நிறுத்தினர்.
அதற்குள் அந்த விமானம் புறப்பட வேண்டாம் என கட்டுப்பாட்டு அறையில் இருந்தும் தகவல் வந்தது.
இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ஒரே நேரத்தில் ஒரு விமானம் புறப்படவும், மற்றொரு விமானம் தரை இறங்கவும் அனுமதி அளிக்கப்பட்டது குறித்து சிவில் விமான போக்குவரத்து தலைமை இயக்குனர் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications