நம்பி வந்த தாய்க்கு இந்த நிலையா?-பிரபாகரன் அண்ணன்
கோபன்ஹேகன்: தாயகத்தை நம்பி சிகிச்சைக்கு வந்த என் தாயை விமானத்தைவிட்டு இறங்கக் கூட திருப்பி அனுப்பி தமிழகம் அவமானப்படுத்திவிட்டதே, என கண்ணீர் மல்க கூறினார் பார்வதி அம்மாளின் மூத்த மகன் வேலுப்பிள்ளை மனோகரன்.
மலேசியாவில் மகள் வினோதினியுடன் தங்கி இருந்த பிரபாகரன் தாயார் பார்வதி அம்மாள், பக்க வாத நோய்க்கு சிகிச்சை பெறுவதற்கு கடந்த வெள்ளிக்கிழமை சென்னை வந்தார். ஆனால் இந்திய குடியேற்றத்துறை அதிகாரிகள் மற்றும் தமிழக போலீசார் அவரை தமிழ் நாட்டுக்குள் அனுமதிக்கவில்லை.
அதே விமானத்தில் பார்வதி அம்மாள் திருப்பி அனுப்பப்பட்டார். 6 மாத விசா கொடுத்த பிறகு இந்திய அதிகாரிகள் மனிதாபிமானம் இல்லாமல் நடந்து கொண்டது உலகம் முழுக்க வாழும் தமிழர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாயாருக்கு ஏற்பட்ட இந்த நிலை கண்டு மிகவும் மனம் உடைந்து போயுள்ளார் டென்மார்க்கில் வசிக்கும் பிரபாகரன் சகோதரர் மனோகரன். டென்மார்க்கில் நடந்த ஒரு விழாவில் பேசிய அவர் கண்ணீருடன் கூறியதாவது:
தமிழ்நாடு சென்று சிகிச்சை பெறுவதற்கு என் தாயாருக்கு மலேசியாவில் உள்ள இந்திய தூதரகம் 6 மாத கால விசா வழங்கி இருந்தது. விமானத்தில் சென்னைக்கு சென்ற பிறகு தாயாரை அதிகாரிகள் தடுத்து நிறுத்திவிட்டனர்.
வந்த விமானத்திலேயே திருப்பி அனுப்பி விட்டனர். தமிழ்நாடு என் தாயை புறக்கணித்ததை நினைத்தபோது மிகவும் வேதனை அடைந்தேன். நாங்கள் அருகாமையில் இருக்க முடியாத நிலையில் தாயகத்து உறவுகளை நம்பியே தனியாக அனுப்பி வைத்தோம். ஆனால் அவருக்கு நேர்ந்த நிலை என்னை நிலைகுலைய வைத்துவிட்டது.
என் தாயார் ஏற்கனவே இந்தியாவில் இருந்தவர். மருத்துவ சிகிச்சை வேண்டியே சென்னை சென்றார். இலங்கை ராணுவ முகாமில் இருந்ததால் அவருக்கு நினைவு மறதி நோய் ஏற்பட்டுள்ளது.
தற்போது எனது தாயாருக்கு ஞாபக சக்தி மிகவும் குறைந்துள்ளது. ஒரு நோயாளி என்ற நிலையிலாவது என் தாயார் மீது இரக்கம் காட்டி இருக்கலாமே.. நல்ல வேளை மலேஷிய அரசு மனிதாபிமானத்துடன் நடந்து கொண்டது. இன்னுமொரு மாதத்துக்குள் தாயாரின் சிகிச்சைக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும்" என்றார் வேதனையுடன்.












Click it and Unblock the Notifications