மகள் மூலம் தகவல் பெற்று தரூருக்கு கொடுத்து கொச்சி அணியை வாங்க உதவிய பிரபுல் படேல்
தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் இருவருக்கு ஐபிஎல் ஊழல் விவகாரத்தில் தொடர்பு உள்ளதாக மீடியாக்கள் செய்தி வெளியிட்டன. இதை தேசியவாத காங்கிரஸின் தலைவரும், மத்திய வேளாண்துறை அமைச்சருமான சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே திட்டவட்டமாக மறுத்தார்.
அதேபோல இன்னொரு தேசியவாத காங்கிரஸ் அமைச்சரான பிரபுல் படேலும் மறுத்தார். ஆனால் இருவரும் பொய் பேசுவதாக தெரிய வந்துள்ளது.
இருவருக்கும் ஐபிஎல் ஊழலில் அசைக்க முடியாத அளவுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
தரூரின் தோழி சுனந்தா புஷ்கருக்குத் தொடர்புடைய ரெண்டஸ்வஸ் நிறுவனம் கொச்சி அணியை வாங்குவதற்கு முக்கிய காரணமே பிரபுல் படேல்தான் காரணம் என்று தெரிய வந்துள்ளது.
கொச்சி அணியும், புனே அணியும் மார்ச் 21ம் தேதி ஏலம் விடப்பட்டன. இதில் எந்தத் தொகையைக் கோட் செய்து கொடுத்தால் அணி கிடைக்கும் என்ற மிக முக்கியமான தகவலை தரூருக்குக் கொடுத்து உதவியுள்ளார் படேல்.
படேலின் மகள் பூர்ணா ஐ.பி.எல். விருந்தினர் உபசரிப்பு மானேஜராக பணியாற்றி வருகிறார். இவருக்கு ஐ.பி.எல். தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர்ராமன், கொச்சி அணி மதிப்பீடு தொடர்பான ரகசிய தகவல்களை இ.மெயில் மூலம் அனுப்பி இருக்கிறார்.
அந்த தகவலை பூர்ணா அங்கிருந்து தனது தந்தையின் செயலாளர் சாம்பா பரத்வாஜுக்கு அனுப்பி இருக்கிறார். அவர் அந்த தகவலை சசிதரூருக்கு இ. மெயில் செய்துள்ளார். இநத வேலைகள் மார்ச் 19ம் தேதி நடந்துள்ளன.
சுந்தர்ராமன் சொன்ன தொகையை குறிப்பிட்டு ஏலம் கேட்ட ரெண்டஸ்வஸ் நிறுவனம் கொச்சி அணியை வென்றுள்ளது.
ஆனால் இந்தப் புகாரை பிரபுல் படேல் மறுத்துள்ளார். அதேசமயம், தான் சில தகவல்களை தரூருக்குக் கொடுத்ததாக ஒப்புக் கொண்டுள்ளார். இதற்கு அவர் கூறும் காரணம் - நானும், தரூரும் நெருங்கிய நண்பர்கள். அந்த அடிப்படையில் கொச்சி அணி ஏலம் தொடர்பாக சில தகவல்களைக் கேட்டார். நானும் மோடியிடம் பேசி அதைப் பெற்றுத் தந்தேன். இது சாதாரண தகவல்கள்தான். இதில் முறைகேடு இல்லை என்றார்.
அதேபோல பவாரின் மகள் சுப்ரியாவின் கணவரான சதானந்தா சுலேவுக்கும் ஐபிஎல் மோசடிகளில் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
ஐபிஎல் போட்டிகளை நேரடி ஒளிபரப்பு செய்யும் உரிம்ம் பெற்ற நிறுவனம் மல்டி ஸ்கிரீன் மீடியா. சோனி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம்தான் இப்படிப் பெயரை மாற்றிக் கொண்டுள்ளது. இந்த நிறுவனத்தில் சதானந்தாவுக்கு 10 சதவீத பங்கு இருக்கிறதாம்.
நேற்று இங்குதான் வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தினர் என்பது நினைவிருக்கலாம்.
தனக்கும், தனது கணவருக்கும், குடும்பத்தினருக்கும் ஐபிஎல்லுடன் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று சுப்ரியா திட்டவட்டமாக மறுத்த நிலையில் அவரது கணவருக்கு, மல்டி ஸ்கிரீன் மீடியா நிறுவனத்தில் 10 சதவீத பங்கு இருப்பது தெரிய வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.