'பாரத் பந்த்': மதுரை-திருவண்ணாமலைக்கு விலக்கு-ஜெயலலிதா அறிவிப்பு
சென்னை: 27ம் தேதி நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ள 'பாரத் பந்த்' போராடத்தில் இருந்து மதுரை மாவட்டம் மற்றும் திருவண்ணாமலை நகருக்கு விலக்கு அளிக்கப்பட்டள்ளதாக
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: 16.4.2010 அன்று அதிமுக, மதிமுக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக் உள்ளிட்ட கட்சிகள், விஷம் போல் ஏறும் விலைவாசி உயர்வுக்கு காரணமான மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசையும், திமுக அரசையும் கண்டித்து 27ம் தேதி நடைபெறவிருக்கும் கடையடைப்பு உள்ளிட்ட பொது வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு பொது மக்களுக்கு அழைப்பு விடுத்தன.
இந் நிலையில் 27ம் தேதி மதுரையில் சித்திரை திருவிழா நடைபெற உள்ளதாலும், சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை கிரிவலத்தில் பக்தர்கள் பெருமளவில் கலந்து கொள்ள இருப்பதாலும், மதுரை மாவட்டம் மற்றும் திருவண்ணாமலை நகரத்திற்கு மட்டும் கடையடைப்பு உள்ளிட்ட பொது வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு விதிவிலக்கு அளிக்குமாறு அப்பகுதி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.
இது குறித்து அனைத்து தோழமை கட்சிகளுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டு, கடையடைப்பு உள்ளிட்ட பொது வேலை நிறுத்தப் போராட்டத்திலிருந்து மேற்படி பகுதிகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் 27ம் தேதி அன்று நடைபெறும் கடையடைப்பு உள்ளிட்ட பொது வேலை நிறுத்த போராட்டத்திலிருந்து மதுரை மாவட்டம் மற்றும் திருவண்ணாமலை நகரத்திற்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்படுகிறது என்பதைத் தெரிவத்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
கரூரில் நாளை அதிமுக ஆர்ப்பாட்டம்:
இவர் வெளியிட்டுள்ள இன்னொரு அறிக்கையில், கரூர் மாவட்டத்தில் 2005ம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் ரூ. 3,500 கோடியாக இருந்த ஜவுளி ஏற்றுமதி தற்போது ரூ. 2,300 கோடி அளவிற்கு குறைந்துள்ளது. ரூ. 1,200 கோடி அளவிற்கு ஏற்றுமதி குறைவதற்கு, கடுமையான மின் வெட்டு மற்றும் வரலாறு காணாத நூல் விலையேற்றம் ஆகிய இரண்டும் தான் முக்கிய காரணங்கள்.
இவை இரண்டும் சேர்ந்து நெருக்குவதன் காரணமாக ஜவுளித் தொழில் அபாய கட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. விசைத் தறிகளில் துணி உற்பத்தி பாதியாக குறைந்து, தொழிலாளர்களின் வேலை நேரமும் பாதியாக குறைக்கப்பட்டிருக்கிறது.
இதன் விளைவாக, தொழிலாளர்களின் ஊதியமும் பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான தொழிலாளர்கள் வேலை இழக்கக் கூடிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது மட்டுமல்லாமல், துணி விலை உயர்ந்து பொது மக்களையும் பாதிப்படைய வைத்துள்ளது.
நூல் விலை உயர்வை கண்டித்து பல போராட்டங்களை பல்வேறு தரப்பினர் நடத்தியும், இதுகுறித்து திமுக அரசு நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை.
கடுமையான மின் வெட்டு காரணமாக கரூர் மாவட்டத்தின் முக்கிய தொழில்களான ஜவுளி உற்பத்தி, கொசு வலை உற்பத்தி, பஸ் பாடி கட்டும் தொழில் உள்ளிட்ட அனைத்துத் தொழில்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
மின் வெட்டு காரணமாக, விவசாயத்திற்கு நீர் பாய்ச்ச முடியாமல் பயிர்கள் கருகி, விவசாயிகள் கடனாளிகளாக ஆகின்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதன் விளைவாக கரூர் மாவட்டத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
மின் வெட்டினை போக்கு வதற்கான நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருப்பதாக திமுக அரசு அறிவிக்கிறதே ஒழிய, மின்வெட்டு நேரம் குறையவில்லை, மாறாக, நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது.
எனவே, நூல் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தாத மின் வெட்டுப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணாத திமுக அரசைக் கண்டித்து கரூர் மாவட்டக் கழகத்தின் சார்பில் நாளை (சனிக்கிழமை) கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக கொள்கை பரப்புச் செயலாளர் தம்பி துரை எம்.பி. தலைமையிலும், கரூர் மாவட்டக்கழகச் செயலாளர் செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ. முன்னிலையிலும் நடைபெறும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
மின்வெட்டால் தமிழகம் பாதிப்பு-செங்கோட்டையன்
இந் நிலையில் வட சென்னையில் நடந்த பாரத் பந்த் விளக்க பொதுக்கூட்டத்தில் பேசிய அதிமுக தலைமை நிலையச் செயலாளர் செங்கோட்டையன் கூறுகையில்,
பங்கேற்று பேசியதாவது:-
நாட்டில் இலவச திட்டம் என்று மக்களை ஏமாற்றும் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். நாட்டை பற்றியும், மக்களை பற்றியும் சிந்திக்கும் ஆட்சி மத்தியிலும், மாநிலத்திலும் இல்லை. நாட்டின் தேவையை பூர்த்தி செய்யும் எண்ணம், திட்டம் இல்லை.
மின் வெட்டால் தமிழகம் வெகுவாக பாதித்துள்ளது. மின் தடை நாட்டின் வளர்ச்சியை பாதிக்கும் மின் தடையால் விசைத்தறி நெசவாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். திருப்பூரில் 14 ஆயிரம் கோடி ஏற்றுமதி தற்போது 10 ஆயிரம் கோடியாக குறைந்து விட்டது.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து ஒரே ஆண்டில் 8 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications