தேவையில்லாமல் தாமதமாகும் மயிலாடுதுறை- விழுப்புரம் ரயில்: கொந்தளிப்பில் மக்கள்
மயிலாடுதுறை: மயிலாடுதுறை- விழுப்புரம் பயணிகள் ரயில் தேவையே இல்லாமல் தாமதமாகி வருவதால் மயிலாடுதுறை மக்கள் கடும் கொதிப்படைந்துள்ளனர்.
மயிலாடுதுறை – விழுப்புரம் இடையிலான ரயில் பாதை அகலப் பாதையாக மாற்றும் பணிக்காக இந்த இரு ஊர்களுக்கு இடையிலான ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பின்னர் அகலப் பாதைப் பணிகள் தொடங்கின.
பணிகள் முடிந்த பின்னரும் கூட ரயில் போக்குவரத்துத் தொடங்கப்படவில்லை. இதுகுறித்து கேட்கப்பட்டபோது தெற்கு ரயில்வே பல்வேறு சப்பைக் காரணங்களைக் கூறிக் கொண்டு ரயில் போக்குவரத்தை தொடங்காமல் இழுத்தடித்து வந்தது.
இதையடுத்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது ஆஜரான ரயில்வே அதிகாரிகள், ஏப்ரல் 21ம் தேதிக்குள் ரயில் போக்குவரத்து தொடங்கும் என உறுதியளித்தனர்.
ஆனால் இன்று கெடு தேதியான நேற்று வரை ரயில் போக்குவரத்து தொடங்கப்படவில்லை. இதையடுத்து தற்போது மயிலாடுதுறையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜேந்திரன் நீதிமன்ற அவதூறு வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
இந்த நிலையில், இன்று முதல் ரயில் ஓடும் என்று திடீரென அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இன்று மயிலாடுதுறை ரயில் நிலையத்திற்கு பெருமளவிலான பயணிகள் வந்தனர். ஆனால் ரயிலைத்தான் காணவில்லை. இதுகுறித்து ரயில் நிலைய அதிகாரிகளிடம் மக்கள் கேட்டதற்கு அவர்கள் சரியான பதிலைத் தரவில்லை.
நீண்ட நேரம் காத்திருந்த மக்கள் கடும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதுகுறித்து பயணிகள் சிலர் கூறுகையில், ரயில்வே துறை ஏன் எங்களை இவ்வளவு கேவலப்படுத்தி அவமானப்படுத்துகிறது என்று தெரியில்லை.
ரயில் பாதை அமைத்து நீண்ட நாட்களாகியும் ஏன் ரயிலை விடாமல் இழுத்தடித்து வருகிறார்கள் என்று புரியவில்லை. இந்த ரயில் போக்குவரத்து தடையால் மயிலாடுதுறை மக்கள் சொல்லொணாத் துயரத்தை அனுபவித்து வருகின்றனர் என்று குமுறினர்.
மயிலாடுதுறை, விழுப்புரம் ரயில் போக்குவரத்தைத் தொடங்காமல் மக்கள் குறித்து சற்றும் கவலைப்படாமல் ரயில்வே துறை நடந்து வருவதன் காரணம் யாருக்கும் புரியவில்லை. இதனால் மயிலாடுதுறை மக்களிடையே கடும் கொதிப்பும், கோபமும் காணப்படுகிறது.
மேற்கு வங்கத்தில் ஒரு பிளாட்பாரத்திற்கு அடிக்கல் நாட்டுவதாக இருந்தால் கூட விழுந்தடித்து ஓடி வேலை பார்க்கிறார்கள் மமதா பானர்ஜியின் ரயில்வே துறையினர். ஆனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வரும் நிலையில் மயிலாடுதுறை – விழுப்புரம் ரயில் போக்குவரத்தைத் தொடங்காமல் இப்படி இழுத்தடித்து வருவதுதான் பெரும் மோசடித்தனமாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications