ஐபிஎல் கூட்டத்தைக் கூட்ட சீனிவாசனுக்கு தகுதி கிடையாது – ஏ.சி.முத்தையா
டெல்லி: கிரிக்கெட் வாரிய செயலாளர் பதவியையும், ஐபிஎல் ஆட்சிமன்றக் குழுவில் உறுப்பினர் பதவியையும், சென்னை சூப்பர் கிங்ஸ் உரிமையாளராகவும் இருக்கும் சீனிவாசனே ஒரு சட்டவிரோதமான பொறுப்புகளை வகிப்பவர். அப்படிப்பட்டவர் எப்படி ஐபிஎல் ஆட்சிமன்றக் குழுவைக் கூட்ட முடியும் என்று கேட்டுள்ளார் சீனிவாசனை எதிர்த்து முன்பு வழக்கு தொடர்ந்தவரும், முன்னாள் கிரிக்கெட் வாரியத் தலைவருமான ஏ.சி.முத்தையா.
சீனிவாசன், கிரிக்கெட் வாரிய பொருளாளராக இருந்தபோது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வாங்கினார். இதை எதிர்த்து முத்தையா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் அதை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. அத்தோடு முத்தையாவுக்கும் கண்டனம் தெரிவித்து அபராதம் விதித்தது.
இந்த நிலையில் தற்போதைய ஐபிஎல் சர்ச்சையில் மோடிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார் முத்தையா.
இதுகுறித்து அவர் கூறுகையில், மோடிக்கு நான் முழு ஆதரவு அளிக்கிறேன். ஐபிஎல் ஆட்சிமன்றக் குழுவை சீனிவாசன் கூட்ட முடியாது என்று அவர் கூறியுள்ளது முழுக்க முழுக்க சரியே. அவர் கிரிக்கெட் வாரிய செயலாளராகவும் இருக்கிறார். ஒரு அணியின் உரிமையாளராகவும் இருக்கிறார். அவர் எப்படி கூட்டத்தைக் கூட்ட முடியும். கூட்டத்தைக் கூட்டுவதற்கான அதிகாரம் அவருக்குக் கிடையவே கிடையாது.
அவரது பதவியே சட்டத்திற்கு புறம்பானதாகும். இவருக்கு வசதியாகத்தான் கிரிக்கெட் வாரிய விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வந்தனர். திருத்தத்திற்கு முன்பு இருந்த கிரிக்கெட் வாரிய சட்டத்தின்படி, வாரியத்தின் எந்த ஒரு நிர்வாகியும், வாரியத்தின் வர்த்தக ரீதியிலான அமைப்புகளில் பங்கு பெற முடியாது என்று இருந்தது. இதை சுட்டிக்காட்டித்தான் நான் வழக்கு தொடுத்தேன் என்றார் முத்தையா.












Click it and Unblock the Notifications