எனது கணவருக்கு சோனியில் பங்கு இருப்பது உண்மைதான், ஆனால் அது மாமனாருடையது – சரத்பவார் மகள்

தரூரைத் தொடர்ந்து ஐபிஎல் மோசடி வலையில் தற்போது மத்திய அமைச்சர்களான சரத் பவாரும், பிரபுல் படேலும் சிக்கியுள்ளனர். இதில் பிரபுல் படேலின் மகள் பூர்ணாவால் பிரபுல் படேலுக்குப் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதேபோல பவாரின் மருமகனால், பவாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பவாரின் மருமகன் சதானந்த பாலச்சந்திர சுலேவுக்கு சர்ச்சைக்குரிய மல்டி ஸ்கிரீன் மீடியா நிறுவனத்தில் 10 சதவீத பங்குகள் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் பவாருக்கு சிக்கலாகியுள்ளது.
ஆனால் இதை திட்டவட்டமாக மறுக்கிறார் சதானந்தாவின் மனைவியும், பவாரின் மகளுமான சுப்ரியா.
இதுகுறித்து சுப்ரியா கூறுகையில், எனது இதயத்தைத் திறந்து கூறுகிறேன், ஐபிஎல் தொடர்பான சர்ச்சைகளில் எனக்கோ, எனது கணவருக்கோ, எனது குடும்பத்தினருக்கோ எந்தத் தொடர்பும் இல்லை.
மல்டி ஸ்கிரீன் மீடியா நிறுவனத்தில் எனது கணவருக்கு 10 சதவீத பங்குகள் இருப்பதை நான் மறுக்கவில்லை. எனது மாமனார் பி.ஆர்.சுலே, மகிந்திரா அன் மகிந்திரா நிறுவனத்தில் நிர்வாக இயக்குநராக இருந்தவர். சோனி நிறுவனத்தின் தலைவராகவும் இருந்தவர்.
அப்போது அவருக்குக் கொடுக்கப்பட்டதுதான் இந்த 10 சதவீத பங்குகள். எனது மாமனாருக்கு தற்போது 84 வயதாகி விட்டது. மிகவும் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே தனது பங்குகளை தனது மகன் பெயரில் எழுதி வைத்து விட்டார். இது சட்டப்பூர்வமானது.
முன்பு எனது கணவருக்கு, ஐபிஎல் அணிகளில் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டினர். ஆனால் அது பொய்யாகி விட்டதால் இப்போது மல்டி ஸ்கிரீன் மீடியா நிறுவனத்தில் வைத்துள்ள பங்குகளை வைத்து சர்ச்சையை எழுப்புகின்றனர் என்றார் சுப்ரியா.












Click it and Unblock the Notifications