சுப்ரீம் கோர்ட் நீதிபதியாகும் சென்னை ஹைகோர்ட் தலைமை நீதிபதி
டெல்லி: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.கோகலே, உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் மொத்தமுள்ள 31 நீதிபதிகள் பணியிடங்களில் இப்போது 4 இடங்கள் காலியாக உள்ளன. இதில் 3 இடங்களுக்கு நீதிபதிகளை நியமித்து ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.கோகலே, ஜார்க்கண்ட் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கயான் சுதா மிஸ்ரா, மும்பை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அனில் ரமேஷ் தேவ் ஆகியோர் பதவி உயர்வு பெற்று உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்படுகின்றனர்.
இவர்களுக்கான பணி நியமன ஆணைகள் ஓரிரு நாட்களில் பிறப்பிக்கப்படும். அதன் பிறகு அவர்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்பர்.
சுப்ரீம் கோர்ட்டின் 4 வது பெண் நீதிபதி:
இதன்மூலம் உச்ச நீதிமன்றத்தின் 4வது பெண் நீதிபதி என்ற பெருமையை கயான் சுதா மிஸ்ரா பெறுகிறார். இதற்கு முன்பு பாத்திமா பீவி, சுஜாதா மனோகர், ரூமா பால் ஆகியோர் பெண் நீதிபதிகளாகப் பணியாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.