ஐபிஎல்லுக்காக மேலும் ஒரு விமானத்தை திசை திருப்பியது அம்பலம்
ஏப்ரல் 12-ந்தேதி ஏர்இந்தியாவின் விமானம் ஒன்று டெல்லியில் இருந்து மும்பை செல்ல இருந்தது. அதே தினத்தன்று ஜெய்ப்பூர் சென்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினருடன் மோதிய மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் மும்பை திரும்ப விமானம் இல்லாமல் இருந்தனர். இதையடுத்து டெல்லி- மும்பை விமானம் வழக்கத்துக்கு மாறாக ஜெய்ப்பூர் வழியாக இயக்கப்பட்டது.
டெல்லியில் அந்த விமானம் புறப்பட்ட போதுதான் ஜெய்ப்பூர் வழியாக விமானம் மும்பை செல்லும் என்று பயணிகளிடம் தெரிவிக்கப்பட்டது. ஜெய்ப்பூரில் அந்த விமானத்தில் கிரிக்கெட் வீரர்கள் ஏறிய பிறகே அவர்களுக்காக விமானம் நேரம் மாற்றி, பாதை மாற்றி விடப்பட்டது தெரிந்தது.
மும்பைக்கு குறிப்பிட்ட நேரத்தை விட பல மணி நேரம் கழித்தே பயணிகள் வந்து சேர்ந்தனர். இது பயணிகளிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியதாக புகார்கள் கூறப்பட்டுள்ளன.
ஆனால் விமான பாதை மாற்றம் அடிக்கடி நிகழக்கூடியதுதான் என்று ஏர் இந்தியா செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். அவருக்கு வேண்டுமானால் இது சகஜமாக இருக்கலாம். ஆனால் அப்பாவி மக்களுக்கு இது அவசியமில்லாததுதானே!