மே 14ல்- சென்னையில் போராட்டம்-கள் இயக்கம் அறிவிப்பு
மதுரை: தமிழகத்தில் கள் இறக்க கோரி மே 14 ம் தேதி அன்று சென்னையில் போராட்டம் நடத்தப்படும் என்று கள் இயக்கம் அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் கள் இறக்கவும், விறப்னை செய்யவும் அரசு தடை விதித்துள்ளது. இந்த தடையை நீக்கும் பொருட்டு சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சிவசுப்ரமணியம் தலைமையிலான குழு நியமிக்கப்பட்டது.
இந்த குழு ஆறு மாதத்துக்குள் அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யும் என்று முதல்வர் கருணாநிதி கூறினார். முதல்வர் கூறிய காலக்கெடு முடிந்து, ஐந்து மாதங்களுக்கு மேலாகியும் கூட அந்த அறிக்கை விபரம் தெரிவிக்கப்படவில்லை.
அறிக்கை தாக்கல் செய்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டதாக குழு தலைவரும், அவரது தரப்பிலும் கூறப்படுகிறது. அதே நேரத்தில், குழு இன்னும் அறிக்கையை தாக்கல் செய்யவில்லை என்று முதல்வர் கருணாநிதி சட்டப் பேரவையில் தெரிவித்துள்ளார்.
கள்ளுக்கான தடையை நீக்கி, குழுவின் அறிக்கையை தெளிவுபடுத்த வேண்டும் என்று கோரி மே 14 ம் தேதி சென்னையில் தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்றார்.