6 ஆண்டுக்கு முன் நிறுத்தப்பட்ட கம்பன், சோழன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மீண்டும் இயக்கம்

விழுப்புரம்- மயிலாடுதுறை இடையே அகலப்பாதை அமைக்கும் பணி நடந்து வந்தது. இதனால் அந்த மார்க்கத்தில் ஓடிய அனைத்து ரயில்களும் நிறுத்தப்பட்டன. 6 ஆண்டுகளாக நடைபெற்ற பணி முடிந்து அகலப்பாதையில் மீண்டும் ரயில் போக்குவரத்து கடந்த 23ம் தேதி முதல் தொடங்கியது.
விழுப்புரம்- மயிலாடுதுறை- விழுப்புரம் தினசரி பாசஞ்சர் ரயில் முதலில் ஓடத்தொடங்கியது இந்த ரயில் அனைத்து நிலையங்களிலும் நின்று செல்லும். விழுப்புரத்தில் மாலை 6.20 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறைக்கு இரவு 10.10 மணிக்கு சென்றடைகிறது.
இதே போல் மற்றொரு பாசஞ்சர் ரயில் விழுப்புரம்- மயிலாடுதுறை- விழுப்புரம் தினசரி (எண் 813, 814) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் விழுப்புரத்தில் காலை 6.10 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறைக்கு 9.50 மணிக்கு செல்கிறது. இந்த ரயில் அதிகாலை 5.30 மணிக்கு மயிலாடுதுறையில் புறப்பட்டு விழுப்புரத்திற்கு காலை 9.15 மணிக்கு வந்து சேருகிறது.
சென்னை எழும்பூர்- நாகூர்- எழும்பூர் (எண் 6175, 6176) கம்பன் எக்ஸ்பிரஸ் ரயில் மீண்டும் விடப்பட்டுள்ளது. இந்த ரயில் எழும்பூரில் இருந்து இரவு 11.15 மணிக்கு புறப்பட்டு நாகூருக்கு காலை 9.15 மணிக்கு சென்றடைகிறது. நாகூரில் இருந்து இரவு 8.05 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.20 மணிக்கு எழும்பூர் வந்து சேருகிறது. இந்த ரயில் தாம்பரம் - விழுப்புரம், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருவாரூர் வழியாக செல்கிறது.
சென்னை எழும்பூர் - மதுரை- எழும்பூர் எக்ஸ்பிரஸ் (எண் 2993, 2994) வாரம் இரு முறை விடப்பட்டுள்ளது. எழும்பூரில் இருந்து வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு மறுநாள் காலை 8.50 மணிக்கு செல்கிறது.
மதுரையில் இருந்து வியாழன், சனிக்கிழமையில் இரவு 9.45 மணிக்கு புறப்பட்டு எழும்பூருக்கு காலை 7.55 மணிக்கு வந்து சேருகிறது. இந்த ரயில் விழுப்புரம், திருப்பாதிரிபுலியூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல் வழியாக செல்கிறது.
இதே போல் சென்னையில் இருந்து திருச்சிக்கு சோழன் எக்ஸ்பிரஸ் (எண் 6853, 6854) இன்று முதல் ஓடியது. எழும்பூர் - திருச்சி - எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை 8.20 மணிக்கு புறப்பட்டு சென்றது இந்த ரயில் திருச்சிக்கு மாலை 4.35 மணிக்கு சென்றடைகிறது. திருச்சியில் காலை 9.10 மணிக்கு புறப்பட்டு எழும்பூருக்கு மாலை 5.45 மணிக்கு வந்து சேரும். செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப் புரம், கடலூர் துறைமுகம், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர் நிலையங்களில் நின்று செல்லும்.
சென்னை எழும்பூர்- வாரணாசி இடையே (4259-4260) வாரம் ஒரு முறை ஓடும் எக்ஸ்பிரஸ் ரயில் ராமேஸ்வரம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து புதன்கிழமை தோறும் இரவு 10.40 மணிக்கு புறப்பட்டு சென்னை- எழும்பூருக்கு வியாழக்கிழமை பகல் 12.55 மணிக்கு வந்து பின்னர் 1.05 மணிக்கு புறப்பட்டு சனிக்கிழமை காலை 5 மணிக்கு வாரணாசி செல்கிறது. இந்த ரயில் கடலூர், சிதம் பரம், மயிலாடுதுறை, கும்ப கோணம், தஞ்சாவூர், திருச்சி, காரைக்குடி, மானாமதுரை நிலையங்களில் நின்று செல்லும். இந்த சேவை அடுத்த மாதம் 2ம் தேதி முதல் தொடங்குகிறது.
எழும்பூர்- ராமேஸ்வரம் இடையே ஓடும் (6101, 6102) ரயில் மயிலாடுதுறை, கும்பகோணம், திருச்சி வழியாக மாற்றி விடப்படுகிறது.
சென்னை எழும்பூர்- திருச்செந்தூர் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் தற்போது விருத்தாச்சலம் வழியாக செல்கிறது. இனி மயிலாடுதுறை, கும்பகோணம், திருச்சி வழியாக செல்லும் 29.7.2010 முதல் இது நடைமுறைக்கு வருகிறது.
விழுப்புரம்- தாம்பரம் பாசஞ்சர் ரயில் விழுப்புரத்தில் காலை 5.05 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 4.45 மணிக்கு புறப்படும்.












Click it and Unblock the Notifications