அணி உரிமையாளர்கள் அவரவர் வேலையை மட்டும் பார்க்க வேண்டும்- மனோகர் எச்சரிக்கை
கொல்கத்தா: ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் அவரவர் வேலையை மட்டும் பார்க்க வேண்டும். இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அன்றாட பணிகளில் தலையிடும் வேலையை வைத்துக் கொள்ளக் கூடாது என்று இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் சஷாங் மனோகர் எச்சரித்துள்ளார்.
ஒரே ஒரு இமெயில் மூலம் மோடியின் பதவியைப் பறித்து அதிர வைத்த மனோகர் தற்போது மோடிக்குப் பின்னால் வரிந்து கட்டிக் கொண்டு ட்விட்டர் மூலம் பேசிக் கொண்டிருக்கும் ஐபிஎல் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஐபிஎல் தொடர்பான அனைவருக்கும் நான் சொல்லிக் கொள்ள விரும்புவதெல்லாம் ஐபிஎல் என்பது எந்த ஒரு தனி நபருக்கும் சொந்தமானதல்ல. இது கிரிக்கெட் வாரியத்தின் மிகப் பெரிய சொத்து.
இதை நடத்த யாருடைய அட்வைஸும் எங்களுக்குத் தேவையில்லை. மேலும், கிரிக்கெட் வாரியத்தின் அன்றாட பணிகளில் யாரும் குறிப்பாக ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் தலையிடுவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். ஐபிஎல்லை எப்படி நடத்த வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டியது கிரிக்கெட் வாரியம்தான்.
ஐபிஎல் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சிரயு அமீன் மிகப் பெரிய தொழிலதிபர். நிறுவனங்களை நடத்துவது தொடர்பான அனுபவத்தில் சிறந்தவர். ஐபிஎல்லின் தலைமைப் பொறுப்பில் அவர் நியமிக்கப்பட்டிருப்பது சரியான நடவடிக்கைதான் என்றார்.