For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இது தான் திமுக ஆட்சியின் சாதனை!: ஜெயலலிதா

By Chakra
Google Oneindia Tamil News

சென்னை: கடந்த நான்கு ஆண்டு கால திமுக ஆட்சியில் மின்சாரம் எப்போது வரும், எப்போது போகும் என்று தெரியாத அவலநிலை தமிழ்நாட்டில் நிலவுகிறது என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

திமுக அரசு பொறுப்பேற்றவுடன் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில், 2006ம் ஆண்டு இறுதியில் தமிழ்நாட்டின் மின் உற்பத்தி நிறுவு திறன் 10,760 மெகா வாட்டாக உயரும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், தமிழ்நாட்டின் இன்றைய உற்பத்தித் திறன் வெறும் 7,300 மெகாவாட் தான்.

இது தான் திமுக ஆட்சியின் சாதனை!. இதன் விளைவாக, கடந்த நான்கு ஆண்டு கால திமுக ஆட்சியில் மின்சாரம் எப்போது வரும், எப்போது போகும் என்று தெரியாத அவலநிலை தமிழ்நாட்டில் நிலவுகிறது.

சென்னையில் மின் வெட்டே இல்லை என்று அறிவிக்கிறார் சட்ட அமைச்சர். ஆனால், வட சென்னையில் மின்வெட்டு தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருப்பதோடு மட்டுமல்லாமல், வருகின்ற மின்சாரமும் சீராக இல்லாத சூழ்நிலை தான் நிலவுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதன் காரணமாக அப் பகுதியில் உள்ள வியாபாரிகள், நோயாளிகள், மாணவ- மாணவியர், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

சீரான மின் வினியோகம் இல்லாத காரணத்தால், பொதுமக்களின் மின் சாதனப் பொருட்கள் அடிக்கடி பழுதடைகின்றன. மேலும், வடசென்னை பகுதி மக்களின் நலனை முன்னிட்டு, அதிமுக ஆட்சிக் காலத்தில் தண்டையார்பேட்டை பகுதியில் 110/33 கிலோ வாட் துணை மின் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

திமுக அரசு பொறுப்பேற்று நான்கு ஆண்டு காலமாகியும் இன்னமும் இந்தத் திட்டம் செயல்பாட்டிற்குக் கொண்டு வரப்படவில்லை.

இது குறித்து, ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பி.கே. சேகர்பாபு இரண்டு முறை சட்டமன்றத்தில் குரல் கொடுத்தபோது, இந்தத் திட்டத்தை செயல்படுத்துவோம் என்று மின்சாரத் துறை அமைச்சர் உறுதிமொழி அளித்தார். இருப்பினும், இதுநாள் வரை இந்தத் திட்டம் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படவில்லை.

எனவே, வட சென்னையில் நிலவும் மின் வெட்டை சீர் செய்யாத, தண்டையார் பேட்டை 110/33 கிலோ வாட் துணை மின் நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வராத திமுக அரசைக் கண்டித்தும், உடனடியாக இவற்றை நிறைவேற்ற வலியுறுத்தியும், அதிமுக வட சென்னை மாவட்டக் கழகத்தின் சார்பில் 29ம் தேதி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X