தமிழகத்தில் 30 இடங்களில் கடலோரக் காவல் நிலையங்கள் – எஸ்.பி.
தூத்துக்குடி: கண்காணிப்பை அதிகரிக்கும் விதமாக தமிழக கடலோர பாதுகாப்பு போலீசுக்கு மேலும் 20 அதிநவீன படகுகள் வாங்கப்பட உள்ளது. 30 காவல் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக கடலோர பாதுகாப்பு குழும எஸ்பி முகமது ஹனிபா தெரிவித்தார்.
கடலோர பாதுகாப்பு குழும எஸ்பி முகமது ஹனிபா தூத்துக்குடிக்கு வந்தார். பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
ஒவ்வொரு மாதமும் தமிழகத்தில் உள்ள ஒரு கடலோர பாதுகாப்பு நிலையத்தில் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் கடலோர பகுதிக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள், அப்பகுதியின் முக்கிய பிரச்சனைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 2ம் கட்டமாக மேலும் 30 கடலோர காவல் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்காக அரசிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
வரும் ஜூனில் அரசு அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து உடனடியாக கட்டுமான பணிகள் துவக்கப்படும். தற்போது கடலோர பகுதிகளில் இயங்கி வரும் ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் 3 ஜீப்கள், 10 பைக்குகள், 4 ஆல்டெரைன் பைக்குகள் வாங்கப்படுகின்றன.
மரைன் போலீசுக்கு வாங்கப்பட இருந்த 24 ரோந்து படகுகளில் இதுவரை 5 டன் எடை கொண்ட படகுகள் 10ம், 10 டன் எடை கொண்ட படகுகள் 7ம் வந்துள்ளன. மீதமுள்ள படகுகள் விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டாவது கட்டமாக கடலோர பகுதிகளில் ரோந்து செல்வதற்காக 5 டன் எடை கொண்ட அதி நவீன சிறிய படகுகள் 10ம், 12 டன் எடையுள்ள 10 படகுகளும் விரைவில் வாங்கப்பட உள்ளன. கேரள மீனவர்கள் தமிழக கடல் பகுதிக்குள் அத்துமீறு நுழைந்து மீன்பிடித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
அத்துமீறல் குறித்து மீனவர்கள், கடலோர கிராம மக்கள் தகவல்களை இலவச தொலைபேசி எண் 1093ல் தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவிக்கலாம் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications