உலர் சாம்பல் விற்பனையில் முறைகேடு?-அரசு மறுப்பு
சென்னை: சிமெண்ட் ஆலைகளுக்கு உலர் சாம்பல் வழங்கியதில் முறைகேடு ஏதும் நடைபெறவில்லை என்று சட்ட அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
அனல் மின் நிலையங்களில் மின்சாரம் தயாரித்த பிறகு நிலக்கரியில் இருந்து கிடைக்கும் உலர் சாம்பல் சிமெண்ட் ஆலைகளுக்கு விற்கப்பட்டு வருகிறது.
இதில் முறைகேடுகள நடப்பதாக சட்டசபையில் குற்றம் சாட்டப்பட்டது. இது குறித்து கேள்விநேரம் முடிந்ததும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக உறுப்பினர்கள் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.
அதன் மீது நடந்த விவாதம்:
ஞானசேகரன் (காங்): வடசென்னை, மேட்டூர், எண்ணூர், தூத்துக்குடி ஆகிய அனல் மின் நிலையங்களில் நிலக்கரியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும்போது உலர் சாம்பல் கிடைக்கிறது. அது குறைந்த விலைக்கு சிமெண்ட் ஆலைகளுக்கு விற்கப்படுவதால் தமிழக அரசுக்கு ரூ.450 கோடிக்கு இழப்பு ஏற்படுகிறது.
தமிழக அரசு இந்த சாம்பலை கொள்முதல் செய்து அரசு சிமெண்ட் ஆலைகளுக்கு கொடுக்க வேண்டும். அதன் மூலம் சிமெண்ட்டை குறைந்த விலைக்கு விற்கலாம்
ஜி.கே.மணி (பாமக): மேட்டூர், கோவை உள்ளிட்ட இடங்களில் போதுமான உலர் சாம்பல் கிடைக்காமல் சிறுதொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே சிறு தொழில்களுக்கு உலர் சாம்பலை போதுமான அளவு வழங்க வேண்டும்.
அமைச்சர் துரைமுருகன்: உலர் சாம்பல் வெளி மார்க்கெட்டில் டன் ஒன்றுக்கு ரூ.1500க்கு விற்கப்படுவதாக கூறுவது சரியான தகவல் அல்ல.மத்திய அரசின் சுற்றுச்சூழல் வனத்துறை ஒரு அரசாணையை வெளியிட்டது. உலர் சாம்பல் 10 ஆண்டுகளுக்கு சிமெண்ட் தயாரிக்கவும், செங்கல் தயாரிக்கவும், கான்கிரீட் போடவும், கட்டிடப் பணிக்கும் கட்டணம் ஏதும் இன்றி வழங்க கடந்த 2008ம் ஆண்டு உத்தரவிட்டது. அனல் மின் நிலையங்களில் 1.5 கோடி டன் நிலக்கரி பயன்படுத்தப்படுகிறது. இதில் 40 சதவீத நிலக்கரி சாம்பலாகிவிடுகிறது. அதில் 70 சதவீதம் உலர் சாம்பலாகிறது.
2002-2003ம் ஆண்டில் இந்த உலர் சாம்பல் கேட்பாரற்று கிடந்தது. யாராவது அதை அள்ளிச் செல்ல மாட்டார்களா என்று அனல் மின் நிலையங்களில் நினைத்தனர். அதன் பின்னர் சிமெண்ட் ஆலைகள் ஒரு அமைப்பை உருவாக்கி உலர் சாம்பல் 80 சதவீதம் பெறுவதற்கு அரசுடன் 9 வருடத்திற்கு ஒப்பந்தம் செய்து கொண்டன.
20 சதவீத உலர் சாம்பலை வாங்க யார் முதலில் வருகிறார்களோ அவர்கள் பெற்றுக் கொள்ளலாம். 2009ம் ஆண்டு நவம்பர் மாதம் ஒரு ஆணையை மத்திய அரசு வெளியிட்டது. அதில் உலர் சாம்பல் டன் ஒன்றுக்கு ரூ.200, ரூ.300, ரூ.100 என்றும் நிர்ணயித்தது.
அந்த விலையையும் தமிழக அரசு ரூ.250, ரூ.350, ரூ.100 என்று நிர்ணயித்து அதன்படி உலர் சாம்பல் கொடுக்கப்படுகிறது.
நிலக்கரியே ஒரு டன் ரூ.2,500க்கு தான் இறக்குமதி செய்யப்படுகிறது. எனவே உலர் சாம்பல் வெளிமார்க்கெட்டில் டன் ஒன்றுக்கு ரூ.1,500க்கு விற்க முடியுமா என்பதை யோசிக்க வேண்டும். இந்த உலர் சாம்பல் கடந்த ஆண்டு ரூ.42 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. இது இந்த வருடம் ரூ.72 கோடியாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே உலர் சாம்பலை தமிழக அரசு யாருக்கும் தாராளமாக விற்கவில்லை. மத்திய அரசு நிர்ணயித்த விலையை விட அதிக விலைக்குத் தான் விற்கிறது.
பீட்டர் அல்போன்ஸ் (காங்): எங்கள் பகுதியில் உலர் சாம்பலையும் சிமெண்டையும் பயன்படுத்தி செய்யப்பட்ட 'ஹாலோ பிளாக்' செங்கலை அதிக அளவில் தயாரிக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு உலர் சாம்பல் போதிய அளவு கிடைக்காததால் அந்த தொழில் பாதிக்கிறது. எனவே உலர் சாம்பலை ஏலத்திற்கு விட்டால் அரசுக்கும் அதிக பணம் கிடைக்கும்.
வேல்முருகன் (பாமக): சாலைகள் அமைக்கவும் உலர் சாம்பல் பயன்படுத்தப்படுகிறது. எனவே உலர் சாம்பலுக்கு கூடுதல் விலை நிர்ணயித்தால் அரசுக்கு அதிக வருவாய் கிடைக்கும்.
அமைச்சர் துரைமுருகன்: சிமெண்ட் ஆலைகள் உருவாக்கிய அமைப்புடன் 9 வருடத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதால் உடனடியாக எதுவும் செய்துவிட முடியாது. ஆனால் உறுப்பினர்களின் கோரிக்கை குறித்து மத்திய அரசுடன் பேச முடியுமா என்று முதல்வரிடம் கலந்து பேசி பரிசீலிக்கப்படும்.
சிறையில் சிம்கார்டு வீச்சு:
ஞானசேகரன் (காங்.): வெளியே இருந்து சென்னை புழல் சிறைக்குள் கஞ்சா, கத்தி, சிகரெட் ஆகியவை வீசப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலையின் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளன. இத்தகைய நடவடிக்கையை தடுக்க அரசு முன்வருமா?.
அமைச்சர் துரைமுருகன்: புழல் சிறைக்குள் பந்து போன்ற பொருள் கிடந்துள்ளது. அதை உடைத்து பார்த்தபோது அதன் உள்ளே ஒரு சிம் கார்டும், ஒரு பிளேடும் இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து எல்லா சிறைச்சாலைகளையும் சோதனை போட உத்தரவிடப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து நெல்லையில் உள்ள சிறைச்சாலையில் செல்போன் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. இனிமேல் அனைத்து சிறைகளின் கண்காணிப்பும் தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications