ஆபாசப் படங்களுடன் பிஇ மாணவியை விபச்சாரப் பெண்ணாக சித்தரித்த மாணவர் கைது
கோவை: சக மாணவியை விபச்சாரப் பெண்ணாக சித்தரித்து, அவரது ஆபாசப் படங்களையும் இன்டர்நெட்டில் வெளியிட்ட கோவையைச் சேர்ந்த பொறியியல் மாணவரை போலீஸார் கைது செய்தனர்.
கோவையில் உள்ள பிரபல என்ஜினீயரிங் கல்லூரியில் படிக்கும் கல்லூரி மாணவி ஒருவரை விபசார அழகியாக சித்தரித்து சமீபத்தில் ஆபாச படங்கள் இணைய தளத்தில் வெளியானது. குறிப்பிட்ட மாணவியின் படத்தோடு வேறு சில பெண்களின் நிர்வாண படங்களை கிராபிக்ஸ் முறையில் இணைத்து ஆபாச படங்கள் வெளியாகியிருந்தன.
அதுவும் அந்த மாணவியின் பெயரில் உள்ள இணைய தளத்தில் குறிப்பிட்ட படங்கள் வெளியிடப்பட்டன. அந்த மாணவியே தன்னை விபசார அழகி போல சித்தரித்துக் கொண்டு உல்லாசத்துக்கு வாடிக்கையாளர்களை அழைப்பது போன்று வாசகங்களும் இடம் பெற்றிருந்தன. இதை இணைய தளத்தில் பார்த்த குறிப்பிட்ட மாணவி கதறி அழுது தற்கொலைக்கு முயன்றார்.
இதையடுத்து என்ஜினீயரிங் கல்லூரியின் முதல்வர், சென்னைக்கு அந்த மாணவியோடு வந்து சி.பி.சி.ஐ.டி. கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. அர்ச்சனா ராமசுந்தரத்திடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
புகார் மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி அர்ச்சனா ராமசுந்தரம் உத்தரவிட்டார். சி.பி.சி.ஐ.டி., சைபர் கிரைம் டி.எஸ்.பி. சூப்பிரண்டு பாலு, இன்ஸ்பெக்டர் வேல்முருகன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் பாதிக்கப்பட்ட மாணவியோடு ஒன்றாக படிக்கும் என்ஜினீயரிங் மாணவர் ஒருவரே இந்த செயலுக்குக் காரணம் என்பது தெரிய வந்தது.
சலூன் தொழிலாளியின் மகன்
அவரது பெயர் மணிகண்டன் (23). பொள்ளாச்சி அருகே உள்ள டி. கொட்டாம்பட்டி, ராஜீவ் நகரை சேர்ந்தவர். இவரது தந்தை சுந்தரம் முடி திருத்தும் கடை வைத்துள்ளார். கஷ்டப்பட்டு மணிகண்டனை அவரது தந்தை படிக்க வைத்துள்ளார்.
மணிகண்டனை போலீசார் கைது செய்து நேற்று முன்தினம் சென்னை அழைத்து வந்தனர். அவரிடம் விசாரணை நடத்தியபோது, சக மாணவியை ஆபாசமாக பார்க்க ஆசைப்பட்டு இவ்வாறு நடந்து கொண்டதாக தெரிவித்தார். இதை போலீசாரால் கண்டுபிடிக்க முடியாது என்று நினைத்து இந்த தவறான விளையாட்டில் ஈடுபட்டதாகவும் அவர் கூறினார்.
அவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், தகவல் தொழில்நுட்ப முறைகேடு தடுப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் போலீசார் நடவடிக்கை எடுத்து கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications