ஒகேனக்கல் திட்டம்-'வாழு, வாழவிடு'.. கர்நாடகம்!
நிருபர்களிடம் பேசிய அவர், தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள ஒகேனக்கல்லில் தமிழக அரசு குடிநீர்த் திட்டத்தை துவங்கும் பணியை மேற்கொண்டுள்ளது. அதற்காக அந்த மாநிலம் பட்ஜெட்டில் நிதியும் ஒதுக்கியுள்ளது.
இத்திட்டம் அமையும் இடம் இரு மாநில எல்லையில் அமைந்தள்ளது. இதனால் மத்திய சர்வேத் துறை முன்னிலையில் அந்தப் பகுதியில் சர்வே நடத்த வேண்டும், அதன் பிறகு தமிழக அரசு குடிநீர்த் திட்டத்தை துவங்கலாம். இது தான் கர்நாடகத்தின் கோரிக்கையாகும்.
ஒகேனக்கலில் குடிநீர்த் திட்டத்தை தமிழக அரசு துவக்குவதை எதிர்க்கவில்லை. ஆனால் திட்டத்தைத் துவங்கும் முன் இரு மாநிலமும் பேசி பிரச்சனையைத் தீர்க்க வேண்டியது அவசியம்.
காவிரி ஆற்றில் சிவனசமுத்திரம், மேகேதாட் ஆகிய பகுதிகளில் நீர் மின் திட்டங்களைத் துவக்க கர்நாடகம் திட்டமிட்டுள்ளது.
இத்திட்டங்களுக்கு தமிழக அரசு எதிர்ப்புத் தெரிவித்து வந்துள்ளது. நமது கோரிக்கை வாழு, வாழவிடு என்பதுதான். குடிநீர் எல்லோருக்கும் அத்தியாவசியமானது. எனவே, அதற்கு கர்நாடகம் எதிர்ப்புத் தெரிவிக்கிறது என்று கருதக்கூடாது.
அதுபோல் மின்சாரமும் முக்கியமானது. எனவே கர்நாடகம் துவங்க உள்ள மின் திட்டங்களுக்கு தமிழக அரசும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அந்த வகையில் இரு மாநிலங்களும் ஏற்கும் திட்டத்தை தயாரிக்கும்படி கர்நாடக நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் எதியூரப்பா உத்தரவிட்டுள்ளார். அந்தத் திட்டத்தை தமிழகத்திடம் அளிப்போம்.
ஒகேனக்கல் குடிநீர்த்திட்டம், மற்ற இரு நீர் மின் திட்டங்கள் ஆகியவற்றைத் துவக்குவது குறித்து தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த கர்நாடகம் தயாராக இருக்கிறது. இந்த வகையில் கர்நாடகத்திலிருந்து ஒரு குழு சென்னை சென்று அங்கு தமிழக முதல்வர் கருணாநிதியை சந்தித்துப் பேச விரும்புகிறது.
இதுதொடர்பாக குழு சென்னைக்கு எப்போது செல்வது என்பது குறித்து விரைவில் தீர்மானிக்கப்படும் என்றார்.