வேறு மொழியில் பதிலளிக்க அமைச்சர்கள் முன் அனுமதி பெற வேண்டும்: மீரா குமார்
டெல்லி: நாடாளுமன்றத்தில் இந்தி அல்லது ஆங்கிலத்தில் தான் அமைச்சர்கள் பதிலளிக்க வேண்டும். அதைத் தவிர வேறு மொழியில் பதிலளிப்பதாக இருந்தால் என்னிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்று மக்களவை சபாநாயகர் மீரா குமார் கூறினார்.
மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துக் கொண்டிருந்த மரபு சாரா எரிசக்தித்துறை அமைச்சர் பரூக் அப்துல்லா, ஒரு துணை கேள்விக்கு பஞ்சாபி மொழியில் பதிலளித்தார்.
அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் மீரா குமார், மக்களவையில் அமைச்சர்கள் ஆங்கிலம் அல்லது ஹிந்தியில் பதில் அளிக்கலாம் என்ற விதிமுறை உள்ளது. வேறு மொழியில் பதிலளிப்பதாக இருந்தால் முன்னதாகவே நோட்டீஸ் தந்து அனுமதி பெற வேண்டும். அப்போதுதான் மொழி பெயர்ப்பாளரை ஏற்பாடு செய்து உறுப்பினர்களுக்கு பதிலை மொழி பெயர்த்துத் தர முடியும் என்றார்..
அழகிரி என்னை சந்திக்க வேண்டும்: மீரா
இந் நிலையில் புதுச்சேரி வந்த மீரா குமார் டெல்லி திரும்புவதற்காக நேற்றிரவு சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
தமிழக மக்கள் அன்பும் பாசமும் கொண்டவர்கள். அவர்களை சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
நாடாளுமன்றத்தில் தமிழில் பேசுவது குறித்து அமைச்சர் அழகிரி என்னை வந்து சந்தித்தால், அவரது பிரச்சனைக்குத் தீர்வு காணப்படும் என்றார்.