ஈழத் தமிழர்களைக் காக்கத் தவறி விட்டது ஐ.நா. - கிருஷ்ணசாமி
கோவை: ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கை அரசை தட்டிக் கேட்காமலும், தண்டனை கொடுக்காமலும் ஐ.நா. மவுனம் சாதிப்பதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி குற்றம் சாட்டினார்.
புதிய தமிழகம் கட்சியின் இணையதள தொலைக்காட்சி, கோவையில் துவங்கப்பட்டது.
அப்போது, இணையதள தொலைக் காட்சியை ,புதிய தமிழகம் கட்சியின் நிறுவனரும் தலைவருமான கிருஷ்ணசாமி துவக்கி வைத்து பேசுகையில்,
தமிழ் மக்களுக்காக 24 மணி நேரமும் தொடர்ந்து இயங்கும் வகையில் http://webtv.ptparty.org என்ற இணையதள தொலைக் காட்சி சேவையை புதிய தமிழகம் தொடங்கியுள்ளது.
உலகத் தமிழர்களின் நலனுக்காகவும், தமிழனின் உரிமைக்காகவும் பாடுபடுவோம்.
உலகத் தமிழர்களின் நிலை குறித்த நிகழ்ச்சிகள், செய்தி, மருத்துவம், வேலை வாய்ப்பு, கால நிலை, பொழுது போக்கு உள்ளிட்ட தகவல்களும் இந்த இணையதளத்தில் இடம் பெறும்.
உலகம் முழுக்க உள்ள எட்டு கோடி தமிழர்களை ஒன்றிணைப்பதே எங்களின் லட்சியம். இதன் மூலம் ஒன்றிணைந்த தமிழ் உலகமாகவும், உலகத்தமிழ் சமுதாயமாகவும் மாறும் என்ற நம்பிக்கை உள்ளது.
ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கை அரசை தட்டிக் கேட்காமலும், தண்டனை கொடுக்காமலும் ஐ.நா. சபை மவுனம் சாதித்து வருகின்றது.
இது போன்ற பிரச்னைகளில் நாங்கள் தலையீட்டு தீர்வு காணும் முயற்சியில் இறங்கியுள்ளோம்.
இந்தோனேஷியா, பர்மா, மலேசியா நாடுகளில் ரப்பர் தோட்டங்களில் கூலிகளாகவும், அடிமைகளாகவும் உள்ள தமிழர்களின் வாழ்வாதாரங்களை காப்பாற்ற புதிய தமிழகம் கட்சி போராடும் என்றார்.